திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் செயின்ட் மேரி மேஜர் பசிலிக்காவில் செபம்
சன.02,2014. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், புத்தாண்டு நாள் பிற்பகலில் உரோம் நகரில்
உள்ள செயின்ட் மேரி மேஜர் பசிலிக்காப் பேராலயம் சென்று, அன்னையின் திரு உருவத்திற்கு
முன் 20 நிமிடங்களுக்கு மேல் செபத்தில் ஈடுபட்டார். சனவரி 1, புத்தாண்டு நாளன்று,
கொண்டாடப்பட்ட அன்னை மரியா இறைவனின் தாய் என்ற பெருவிழாவையொட்டி, உரோம் நகரில் புகழ்பெற்ற
திருத்தலமான அன்னை மரியாவின் பசிலிக்காவிற்கு திருத்தந்தை எவ்வித முன்னறிவிப்பும் இன்றி
சென்றபோது, அப்பேராலயத்தில் கூடியிருந்த பலர் வியப்படைந்தனர். கடந்த மார்ச் 13ம் தேதி
திருஅவையின் தலைமைப் பொறுப்பை ஏற்ற திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அடுத்தநாள் அன்னையின்
பசிலிக்காவிற்குச் சென்று வேண்டியதும், அதற்குப்பின் வேறு பல தருணங்களில் அங்கு சென்று
செபித்ததும் குறிப்பிடத்தக்கது. "உரோம் நகர் மக்களுக்கு நலமாக" விளங்கும் அன்னை மரியாவைப்
பற்றி திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், சனவரி 1ம் தேதியன்று நிகழ்த்திய திருப்பலியில்
சிறப்பாகக் குறிப்பிட்டுப் பேசியதைத் தொடர்ந்து, தனிப்பட்ட முறையில் அன்னையைச் சென்று
தரிசித்து வந்தார்.