சிறையிலுள்ள ஆசியா பீபி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுக்குக் கடிதம்
சன.02,2014. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களே, பல சிறைக் கைதிகளைப் போல நானும் பாகிஸ்தான்
முல்தான் சிறையில் கிறிஸ்மஸ் கொண்டாடினேன் என்று ஆசியா பீபி என்ற பெண் கூறியுள்ளார். தேவ
நிந்தனை குற்றம் என்ற பழி சுமத்தப்பட்டு, பாகிஸ்தான் சிறையில் துன்புறும் ஆசியா பீபி
என்ற பெண், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுக்கு அனுப்பியுள்ள மடலில் இவ்வாறு கூறியுள்ளார்
என்று இத்தாலிய நாளிதழ் Tempi கூறியுள்ளது. புனித பேதுரு பசிலிக்காப் பேராலயத்தில்
திருத்தந்தை ஆற்றும் கிறிஸ்மஸ் திருப்பலியைக் காண தான் கொண்டிருக்கும் ஆர்வம், அடுத்த
ஆண்டிலாவது நிறைவேறும் என்ற நம்பிக்கையை, ஆசியா பீபி அவர்கள் தன் மடலில் வெளியிட்டுள்ளார். தனக்காக
திருத்தந்தை அவர்கள் செபித்து வருகிறார் என்பதை தான் அறிந்துள்ளதாகவும், இறைவன் தன்னை
எப்படியும் விடுவிப்பார் என்றும் ஆசியா பீபி அவர்கள் இம்மடலில் குறிப்பிட்டுள்ளார். 2009ம்
ஆண்டு ஜூன் மாதம் ஆசியா பீபி மீது சுமத்தப்பட்ட தேவ நிந்தனை குற்றம் இதுவரை தெளிவாக நிரூபணம்
ஆகாமல் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.