புலரும் புத்தாண்டு நாள் முதல், 'புனிதரும் மனிதரே' என்ற புதிய நிகழ்ச்சியை வத்திக்கான்
வானொலி குடும்பத்தினருக்கு அறிமுகப்படுத்துகிறோம். புனிதம் என்றதும், ஏதோ வானத்தில்,
தொடமுடியாத தூரத்தில் இருக்கும் ஒரு நிலை என்ற எண்ணம் நம்மில் பலருக்கும் எழலாம். ஆனால்,
புனிதரெனப் போற்றப்படும் பலரின் வாழ்வைப் புரட்டிப் பார்த்தால், அவர்கள் மிக எளிதான வாழ்வை,
அர்ப்பண உணர்வுடன், முழுமையாக வாழ்ந்ததால் இந்நிலையை அடைந்தனர் என்பதை உணரலாம். கடந்த
அக்டோபர் மாதம் (அக்.02) திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வழங்கிய புதன் பொது மறையுரையில்
கூறிய அழகான கருத்து இதுதான்: "புனிதத்துவம் என்பது அசாதாரணச் செயல்களை ஆற்றுவதில்
அல்ல, மாறாக, சாதாரணச் செயல்களையும் அன்புடனும்,
நம்பிக்கையுடனும் ஆற்றுவதில் அடங்கியுள்ளது" என்று கூறினார். திருத்தந்தையின்
சொற்கள் எங்கள் உள்ளங்களில் தூண்டிய ஒரு சிந்தனை ஓட்டமே, 'புனிதரும் மனிதரே' என்ற நிகழ்ச்சியாக
உருவெடுத்துள்ளது. புனிதர்கள் வாழ்வில் நிகழ்ந்த வெகு சாதாரணமான நிகழ்ச்சிகளை, 'புனிதரும்
மனிதரே' என்ற பகுதியில் இவ்வாண்டு முழுவதும் உங்களுடன் பகிர்ந்துகொள்ள விழைகிறோம். புனிதர்களைப்
பீடமேற்றி வணங்கமட்டுமே முடியும், அவர்களைப் போல வாழமுடியாது என்று எண்ணிவரும் நமக்கு,
'புனிதரும் நம்மைப்போல் மனிதரே' என்ற உண்மையை உள்ளத்தில் பதிக்கவும், நாமும் புனிதராகலாம்
என்ற நம்பிக்கையை நம்முள் வளர்க்கவும் இந்நிகழ்ச்சி உதவியாக இருக்கும் என்று நம்புகிறோம். இந்நிகழ்ச்சியைத்
துவக்கி வைக்க, முத்திப்பேறு பெற்ற அன்னை தெரேசா. அவர்கள் வாழ்வில் நிகழ்ந்த ஓர் எளிய
நிகழ்ச்சியைக் கேட்போம்:
ஒருநாள் அன்னை தெரேசாவை ஒருவர் அணுகிவந்து, அவரிடம்,
"அன்னையே, நான் இறைவனுக்கு ஏதாவது பெரியதொரு காரியம் செய்யவேண்டும் என்று ஆசைப்படுகிறேன்.
ஆனால், என்ன செய்வதென்று தெரியாமல் குழம்பிப் போயிருக்கிறேன்" என்று ஆரம்பித்தார். அன்னை
அவரிடம், "இறைவனுக்கு என்ன செய்யலாம் என்று எண்ணுகிறீர்கள்?" என்று கேட்டார். அவர்
மறுமொழியாக, "ஏழைகளுக்கென ஒரு பள்ளிக்கூடம் ஆரம்பிக்கவா? மருத்துவமனை ஒன்று கட்டவா?
அல்லது, அயல்நாடு சென்று ஆண்டவனைப் பறைசாற்றவா?" என்று அடுக்கிகொண்டே போனார். அன்னை
அவரிடம் அமைதியாக, "நீங்கள் உங்கள் குடும்பத்திற்குத் திரும்பிச் செல்லுங்கள். அங்கு,
அன்புக்காக ஏங்கித் தவிப்பவர் யாரும் இல்லை என்பதை முதலில் உறுதி செய்யுங்கள்" என்றார்.