மத்திய கிழக்குக் கிறிஸ்தவர்கள் அப்பகுதியைவிட்டு வெளியேற வேண்டாம், முதுபெரும் தந்தை
3ம் கிரகரி வேண்டுகோள்
டிச.28,2013. ஆலயங்கள் அழிக்கப்பட்டு, பங்குத்தளங்கள் கைவிடப்பட்டு, சமூகத்தில் ஓரங்கட்டப்பட்ட
துன்பநிலையை எதிர்கொள்ளும் மத்திய கிழக்குப் பகுதி கிறிஸ்தவர்கள் தங்களின் பூர்வீக இடங்களிலே
தொடர்ந்து தங்கியிருக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார் அந்தியோக்கியாவின் கிரேக்க கத்தோலிக்க
முதுபெரும் தந்தை 3ம் கிரகரி. கிறிஸ்மஸ் மற்றும் புத்தாண்டுக்கென உருக்கமான அறிக்கை
ஒன்றை வெளியிட்டுள்ள முதுபெரும் தந்தை 3ம் கிரகரி அவர்கள், தம் மக்கள் தாங்கள் வாழும்
கிராமங்கள் அல்லது நகரங்களில் தொடர்ந்து வாழுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார். இஸ்லாம்
தீவிரவாதிகளால் கிறிஸ்தவர்கள் அடிக்கடி துன்புறுத்தப்பட்டு ஓரங்கட்டப்பட்டாலும், இக்கிறிஸ்தவர்களின்
இருப்பை முஸ்லிம் பிரதிநிதிகள் மிகவும் விரும்புகின்றனர் என்றும் முதுபெரும் தந்தையின்
அறிக்கை கூறுகிறது. முஸ்லிம் அரபு உலகத்துக்கு கிறிஸ்தவர்கள் தேவைப்படுகின்றனர்
என்று எழுதியுள்ள முதுபெரும் தந்தை 3ம் கிரகரி, மத்திய கிழக்கில் கிறிஸ்தவர்கள் இன்றி
அரபு உலகம் வாழ முடியாது என, தன்னால் உறுதியாகச் சொல்ல முடியும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.