கிறிஸ்து பிறப்புப் பெருவிழாவன்று ஈராக் நாட்டின் தலைநகர் பாக்தாத்தில் குண்டுத் தாக்குதல்கள்
டிச.26,2013. ஈராக் நாட்டின் தலைநகர் பாக்தாத்தில் கிறிஸ்து பிறப்புப் பெருவிழாவன்று
கிறிஸ்தவர்களை இலக்காக்கி மூன்று இடங்களில் நடைபெற்ற குண்டுத் தாக்குதல்களில் குறைந்தது
37 பேர் கொல்லப்பட்டுள்ளனர். பாக்தாத் நகரின் தென் பகுதியில் Dora எனுமிடத்தில் ஒரு
கிறிஸ்தவக் கோவிலருகே நிறுத்தப்பட்டிருந்த காரில் ஏற்பட்ட குண்டு வெடிப்பால் 26 பேர்
கொல்லப்பட்டனர், 38 பேர் காயமடைந்துள்ளனர் என்று காவல்துறை அறிவித்துள்ளது. இதற்கு
முன்னதாக, Athorien என்ற பகுதியில் இடம்பெற்ற இரு குண்டு வெடிப்புக்களில் 11 பேர் கொல்லப்பட்டனர்,
21 பேர் காயமடைந்துள்ளனர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இக்குண்டுவெடிப்புக்கள் கிறிஸ்மஸ்
திருப்பலிகள் முடிந்தபின் நிகழ்த்தப்பட்டன என்று கூறிய கல்தேய வழிபாட்டு முறை முதுபெரும்
தந்தை, பேராயர் லூயில் சாகோ அவர்கள், இத்தாக்குதல்கள் கத்தோலிக்கத் திருஅவையை இலக்காகக்
கொண்டிருக்கவில்லை என்று தான் நம்புவதாகத் தெரிவித்தார். ஈராக் நாட்டின் மீது அமெரிக்க
இராணுவம் தாக்குதல்களை மேற்கொண்ட காலம் துவங்கி, அந்நாட்டில் இஸ்லாமிய அடிப்படைவாதக்
குழுக்களின் தொடர் வன்முறைகளுக்கு, கிறிஸ்தவர்கள் உள்ளாகி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.