அழிவுகள் மத்தியில் கிறிஸ்மஸ் விழாவின் மையப்பொருள் இன்னும் தெளிவாகத் தெரிகிறது -
கர்தினால் Tagle
டிச.26,2013. நிலநடுக்கம், சூறாவளி ஆகிய இயற்கைப் பேரிடர்களும், அரசியல் நெருக்கடிகளும்
கிறிஸ்து பிறப்பு விழாவின் உண்மைப் பொருளை உணர்வதற்கும், நம் வாழ்வின் தேவைகளை மறு பரிசீலனை
செய்வதற்கும் நம்மைத் தூண்டுகின்றன என்று பிலிப்பின்ஸ் கர்தினால் Luis Antonio Tagle
அவர்கள் கூறியுள்ளார். கிறிஸ்மஸ் பெருவிழாவின் மையமான குழந்தை இயேசு நம் நடுவே பாதுகாப்பற்ற,
வலிமை ஏதுமற்ற ஒரு குழந்தையாக வந்துள்ளார் என்பது நமது வலுவற்ற நிலைகளை உணர்த்துகிறது
என்று மணிலா பேராயர் கர்தினால் Tagle அவர்கள் தன் கிறிஸ்மஸ் செய்தியில் கூறியுள்ளார். Bohol
பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் அழிவுகள், சூறாவளியால் ஏற்பட்ட அழிவுகள் இவற்றின்
மத்தியில் கிறிஸ்மஸ் விழாவின் மையப்பொருள் இன்னும் தெளிவாகத் தெரிகிறது என்று ஒரு பெண்
தன்னிடம் கூறியதை, கர்தினால் Tagle அவர்கள் தன் செய்தியில் சிறப்பாகக் குறிப்பிட்டுள்ளார். 2013ம்
ஆண்டு கொண்டாடப்படும் கிறிஸ்மஸ் காலம் நம்மை இன்னும் ஒருங்கிணைக்கும் காலமாகவும், ஒருவருக்கொருவர்
உதவிகள் செய்யும் காலமாகவும் அமையட்டும் என்று கர்தினால் Tagle அவர்கள் தன் கிறிஸ்மஸ்
செய்தியில் வலியுறுத்தியுள்ளார்.