2013-12-21 16:01:24

திருவருகைக்காலம் - 4ம் ஞாயிறு: ஞாயிறு சிந்தனை


RealAudioMP3 கிறிஸ்து பிறப்புப் பெருவிழா நெருங்கிவிட்டது. ஒரு குழந்தையை மையப்படுத்திக் கொண்டாடப்படும் இவ்விழா, பல கோடி குழந்தைகள் மனதில் கனவுகளை வளர்க்கும் விழா. இவ்விழா காலத்தில் தனக்குக் கிடைக்கப்போகும் பரிசைப் பற்றிய கனவுகள் பலகோடி குழந்தைகளின் உள்ளங்களில் அலைமோதும். அந்தப் பரிசை வழங்கப்போவது 'சாந்தாகிளாஸ்' என்றழைக்கப்படும் கிறிஸ்மஸ் தாத்தா என்ற கனவையும் குழந்தைகள் இந்நாட்களில் சுமந்து வாழ்கின்றனர். குழந்தைகளின் இக்கனவுகள் அர்த்தமற்றவை, ஆபத்தானவை என்ற அறிவுரைகள் வழங்கும் பெரியவர்களையும் நாம் காணலாம். பொதுவாகவே, கனவுகள் காண்பதும், கனவுலகில் வாழ்வதும் குழந்தைத்தனம் என்பது, வயதில் வளர்ந்துவிட்ட பலரின் தீர்ப்பு. கனவுகள் இன்றி இவ்வுலகம் இதுவரை வாழ்ந்திருக்குமா என்பது கேள்விக்குறிதான்.
சரியாக 50 ஆண்டுகளுக்கு முன்னர் (1963, ஆகஸ்ட் மாதம் 28ம் தேதி) கறுப்பு, வெள்ளை இனத்தவரிடையே நல்லுறவு வளரும் என்பதை, "எனக்கொரு கனவு உண்டு" (I have a dream) என்று முழங்கிய மார்ட்டின் லூத்தர் கிங் ஜூனியர் அவர்களையும், அதே கனவு தென் ஆப்ரிக்காவில் நனவாகும் என்ற நம்பிக்கையுடன் வாழ்ந்து, அந்தக் கனவைப் பெருமளவு நனவாக்கி, அண்மையில் புகழுடல் எய்திய நெல்சன் மண்டேலா அவர்களையும், ஆங்கிலேயர் ஆதிக்கத்திலிருந்து மட்டுமல்ல, சாதியப் பிரிவுகள், பெண்ணடிமைத்தனம் ஆகிய தளைகளிலிருந்தும் இந்தியா விடுதலை பெறவேண்டுமென்று கனவுகள் கண்டு, அவற்றை கவிதைகளாக விட்டுச்சென்ற மகாகவி பாரதியார் அவர்களையும் வரலாறு மறந்திருக்க வாய்ப்பில்லை. கனவு காணவும், அக்கனவை நனவாக்கவும் துணிபவர்கள் வாழ்வதால்தான் இவ்வுலகம் இன்றும் வாழ்ந்து வருகிறது.

கனவுகளைப்பற்றி, கனவுகள் காண்போரைப்பற்றி இன்று நாம் சிந்திப்பதற்குக் காரணம்... இந்த ஞாயிறு நற்செய்தியின் நாயகனாக விளங்கும் புனித யோசேப்பு. மரியாவின் கணவரான யோசேப்பு, அமைதியான ஒரு புனிதர். இன்றைய நற்செய்தியில் சொல்லப்பட்டிருப்பதுபோல, அவர் ஒரு நேர்மையாளர். அவர் பேசியதாக நற்செய்தியில் ஒரு வார்த்தைகூட எழுதப்படவில்லை. அவர் ஒன்றும் பேசியிருக்கத் தேவையில்லை, ஏனெனில் அவரது வாழ்வே ஒரு முழு நற்செய்தியாக இருந்தது.
மரியாவின் கணவராய், இயேசுவின் வளர்ப்புத் தந்தையாய் யோசேப்பு தனிப்பட்ட ஓர் இடத்தை நம் மனங்களில் பிடித்துள்ளார். கத்தோலிக்கத் திருஅவையின் காவலர் என்ற உயர்ந்த மதிப்பைப் பெற்றுள்ள புனித யோசேப்பை, வாழ்வின் பல நிலைகளுக்குப் பாதுகாவலர் என்று போற்றுகிறோம். கன்னியர்களின் காவலர், குடும்பங்களுக்குக் காவலர், தொழிலாளர்களுக்குக் காவலர், நற்படிப்புக்குக் காவலர், நல்மரணத்திற்குக் காவலர்... என்று பலவழிகளில் புனித யோசேப்பைப் பெருமைப்படுத்துகிறோம்.
என்னைப் பொருத்தவரை, மனித வாழ்வின் மற்றொரு முக்கிய அனுபவத்திற்கும் இவரைக் காவலர் என்று அழைக்கலாம். யோசேப்புவைக் கனவுகளின் காவலர் என்று நாம் பெருமைப்படுத்தலாம். இதை நான் ஒரு விளையாட்டாகவோ, வேடிக்கையாகவோ கூறுவதாக எண்ணவேண்டாம். கனவுகளின் காவலரான புனித யோசேப்பு என்பதுதான் நமது இன்றைய ஞாயிறு சிந்தனையின் மையம். முதலில் இன்றைய நற்செய்தியைக் கேட்போம்.

மத்தேயு நற்செய்தி 1: 18-24
இயேசு கிறிஸ்துவின் பிறப்பையொட்டிய நிகழ்ச்சிகள்: அவருடைய தாய் மரியாவுக்கும் யோசேப்புக்கும் திருமண ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தது. அவர்கள் கூடி வாழும் முன் மரியா கருவுற்றிருந்தது தெரிய வந்தது. அவர் தூய ஆவியால் கருவுற்றிருந்தார். அவர் கணவர் யோசேப்பு நேர்மையாளர். அவர் மரியாவை இகழ்ச்சிக்கு உள்ளாக்க விரும்பாமல் மறைவாக விலக்கிவிடத் திட்டமிட்டார். அவர் இவ்வாறு சிந்தித்துக் கொண்டிருக்கும்போது ஆண்டவரின் தூதர் அவருக்குக் கனவில் தோன்றி, “யோசேப்பே, தாவீதின் மகனே, உம்மனைவி மரியாவை ஏற்றுக்கொள்ள அஞ்ச வேண்டாம். ஏனெனில் அவர் கருவுற்றிருப்பது தூய ஆவியால்தான். அவர் ஒரு மகனைப் பெற்றெடுப்பார். அவருக்கு இயேசு எனப் பெயரிடுவீர். ஏனெனில் அவர் தம் மக்களை அவர்களுடைய பாவங்களிலிருந்து மீட்பார் என்றார். இதோ! கன்னி கருவுற்று ஓர் ஆண்மகவைப் பெற்றெடுப்பார். அக்குழந்தைக்கு இம்மானுவேல் எனப் பெயரிடுவர் என்று இறைவாக்கினர் வாயிலாக ஆண்டவர் உரைத்தது நிறைவேறவே இவை யாவும் நிகழ்ந்தன. இம்மானுவேல் என்றால் கடவுள் நம்முடன் இருக்கிறார் என்பது பொருள். யோசேப்பு தூக்கத்திலிருந்து விழித்தெழுந்து ஆண்டவரின் தூதர் தமக்குப் பணித்தவாறே தம் மனைவியை ஏற்றுக்கொண்டார்.

மத்தேயு நற்செய்தி 2ம்பிரிவில் மேலும் இருமுறை யோசேப்பு கண்ட கனவுகள் பற்றி கூறப்பட்டுள்ளது. கீழ்த்திசை ஞானிகள் மூவர் வந்து, குழந்தை இயேசுவைக் கண்டு திரும்பிய பின்னர், யோசேப்பின் கனவில் தோன்றிய வானதூதர், அவரை எகிப்திற்கு ஓடிப்போகச் சொல்கிறார். இரவோடு இரவாக மரியாவையும், பச்சிளம் குழந்தை இயேசுவையும் அழைத்துக்கொண்டு யோசேப்பு எகிப்துக்குச் செல்கிறார். (மத். 2: 13-14) எகிப்தில் அகதிகளாய் இவர்கள் வாழ்ந்தபோது, சொந்த நாட்டில் ஏரோது இறந்து விடுகிறான். மீண்டும் யோசேப்புக்குக் கனவில் செய்திவர, அவர் இஸ்ரயேல் நாட்டுக்குத் திரும்புகிறார். (மத். 2: 19-21)

இம்மூன்று சம்பவங்களையும் ஆழமாகச் சிந்தித்தால், பாடங்கள் பல நாம் கற்றுக்கொள்ளலாம். இன்றைய நற்செய்தியில் கூறப்பட்டுள்ள நிகழ்வை முதலில் சிந்திப்போம். யோசேப்பு பயங்கரமான ஒரு சங்கடத்தில் சிக்கியிருப்பதை உணரலாம். மரியாவோடு திருமண ஒப்பந்தம் நடந்து ஒரு சில நாட்கள் அல்லது வாரங்களில் மரியா கருவுற்றிருந்தார் என்ற கசப்பான, பேரிடியான உண்மை யோசேப்புவுக்குத் தெரியவருகிறது. ஊரே போற்றும் அந்த உத்தமப் பெண் தனக்கு மனைவியாகக் கிடைத்திருப்பது தனது பெருமை என்று எண்ணிவந்த யோசேப்புக்குக் கனவிலும் நினைத்துப் பார்க்க முடியாத ஓர் அதிர்ச்சி இது. அவர் மனதில் வீசிய சூறாவளியை ஓரளவு நாம் உணரலாம்.
இச்சூழலில் யோசேப்பு தன் பெயரை, தன் பெருமையை மட்டும் காப்பாற்ற நினைத்திருந்தால், ஊர் பெரியவர்களிடம் இதைத் தெரிவித்திருக்கலாம். அவ்வாறு அவர் செய்திருந்தால், தன்னைக் காப்பாற்றியிருப்பார். மரியாவோ ஊருக்கு நடுவே கொண்டு செல்லப்பட்டு, கல்லால் எறியப்பட்டு, கொடூரமாய் கொலையுண்டிருப்பார். மரியாவின் கதை முடிந்திருக்கும், நம் மீட்பின் கதையும் முடிந்திருக்கும், அல்லது, வேறுவிதமாய் அமைந்திருக்கும்.

மூன்று ஆண்டுகளுக்கு முன், ஈரான் நாட்டில், சகினே அஷ்டியானி (Sakineh Ashtiani) என்ற 43 வயது தாய் கல்லால் எறிந்து கொல்லப்பட வேண்டுமென்று ஈரான் நீதி மன்றம் தீர்ப்பு வழங்கியபோது, அத்தண்டனை எவ்வளவு கொடூரமாய் நடத்தப்படுகிறதென்ற விவரங்கள் தரப்பட்டன. தண்டனை பெற்ற பெண் கழுத்து வரை மண்ணில் புதைக்கப்படுவார். அவரைச்சுற்றி நின்று மற்றவர்கள் (மனிதர்களா அவர்கள்?) அப்பெண்ணின் தலைமீது கல்லெறிந்து அப்பெண்ணைக் கொலை செய்வார்கள் என்ற விவரங்கள் தரப்பட்டன. இவ்விவரங்களை வாசித்தபோது, நாம் மனித குலத்தில்தான் வாழ்கிறோமா என்ற கேள்வி மனதில் எழுந்தது.
2010ம் ஆண்டு ஏப்ரல் மாதம் பாகிஸ்தான் Faisalabadல் கிரண் நய்யாஸ் (Kiran Nayyaz) என்ற 13 வயது கத்தோலிக்கச் சிறுமி செல்வந்தர் ஒருவரது வீட்டில் வேலை செய்து வந்தபோது, பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகி, கருவுற்றார். அச்சிறுமி தங்கள் குடும்ப மானத்தைக் கெடுத்துவிட்டதால், அக்குடும்பத்தில் உள்ள அனைவரும் அச்சிறுமியை எப்படியாவது கொல்லவேண்டும் என்று வெறிகொண்டு திரிந்தனர். எனவே, கிரண், நான்கு அல்லது ஐந்து இடங்களில் ஒளித்து வைக்கப்பட்டார் என்ற செய்தியைக் கேட்டபோது, நாம் வாழ்வது மனிதகுலத்தில்தானா என்ற கேள்வி மீண்டும் எழுந்தது. சென்ற ஆண்டு டிசம்பர் மாதம் இந்தியத் தலைநகர் டில்லியில் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகி இறந்த ஓர் இளம்பெண்ணைப் பற்றிய வழக்கு இன்னும் இந்தியாவில் காயங்களை உருவாக்கி வருகின்றதே!
பத்திரிகை, தொலைக்காட்சி இவை வழியாக வெளிச்சத்திற்கு வரும் இத்தகையச் சம்பவங்கள் ஒன்றிரண்டு என்றால், வெளிச்சத்திற்கு வராமல் கொன்று புதைக்கப்படுவது ஆயிரமாயிரம் பெண்கள் என்பதை நினைவில் கொள்ளவேண்டும். கலாச்சாரம், அறிவியல் என்று பல வழிகளிலும் வளர்ந்துள்ள இந்த 21ம் நூற்றாண்டில் பெண்கள் நிலை இப்படி என்றால், யோசேப்பு வாழ்ந்த இஸ்ரயேல் காலத்தைப் பற்றி சொல்லவே வேண்டாம்.
இந்தச் சிக்கலான சூழலில் யோசேப்பின் கனவில் ஆண்டவரின் தூதர் தோன்றினார் என்கிறது இன்றைய நற்செய்தி. தன்னை மட்டும் காப்பாற்றிக் கொண்டால் போதும், மரியா எக்கேடுகெட்டாகிலும் போகட்டும் என்ற சுயநலக் கோட்டைக்குள் யோசேப்பு வாழ்ந்திருந்தால், அவரிடம் இறைவனின் தூதர் நெருங்கியிருப்பாரா என்பது சந்தேகம்தான். சுயநல மனங்களில் கடவுள் நுழைய நினைத்தாலும், அவரால் முடியாது. மென்மையான மனங்களில் மேலான எண்ணங்களும், கனவுகளும் தோன்றும். அப்படித் தோன்றிய ஒரு கனவையே இன்று நற்செய்தி நமக்குச் சொல்கிறது. இந்தக் கனவில் யோசேப்புக்கு இறைவன் தந்த செய்தியை நாம் இப்படியும் சிந்தித்துப் பார்க்கலாம்: யோசேப்பே, தாவீதின் மகனே, சட்டங்களை, சமுதாயக் கட்டுப்பாடுகளை மட்டும் மனதில் எண்ணிக் குழம்பாதே. அவற்றையும் தாண்டி, மனிதாபிமானத்தோடு நடந்துகொள். இவ்வாறு நீ நடந்தால், உன்னையும் மரியாவையும் மட்டுமல்ல. இவ்வுலகையும் காப்பாற்றும் வழியொன்றை நீ திறப்பாய்.என்பதே கனவில் யோசேப்பு பெற்ற செய்தி என்றும் நாம் சிந்திக்கலாம்.

எல்லாருமே கனவு காண்கிறோம். யோசேப்பும் கனவு கண்டார். அவரை ஏன் கனவுகளின் காவலர் என்று கூறவேண்டும் என்ற கேள்வி எழலாம். இக்கேள்விக்கு விடையாக, இரு காரணங்கள் எனக்குத் தோன்றுகின்றன.
முதல் காரணம் : அதிர்ச்சிகளும், அச்சங்களும் நம்மைச் சூழும்போது, நமது தூக்கம் பெரிதும் பாதிக்கப்படும். அப்படியே நாம் தூங்கினாலும், நமது கனவுகளும் நம்மைப் பயமுறுத்தும். மரியா கருவுற்றிருந்தார் என்பதை அறிந்த யோசேப்பு, கட்டாயம் இந்த ஒரு நிலையில் இருந்திருக்க வேண்டும். நம்பமுடியாத அந்த அதிர்ச்சியின் நடுவிலும், யோசேப்பு, கனவில் தனக்குக் கிடைத்தச் செய்தியை நற்செய்தி என்று நம்பினாரே, அந்தக் காரணத்திற்காக யோசேப்பைக் கனவுகளின் காவலராகப் போற்றலாம்.
இரண்டாவது காரணம் : யோசேப்பு தன் கனவில் கண்டதைச் செயல்படுத்தினார். கனவு காண்பது எளிது. கனவு முடிந்து எழுந்ததும், கனவின்படி நடப்பது அவ்வளவு எளிதல்ல. கண்ட கனவு சுகமான கனவு என்றால் ஒருவேளை செயல்படுத்துவது எளிதாகலாம். உதாரணமாக, குறிப்பிட்ட ஒரு ‘க்ரீமை’ப் பயன்படுத்தினால், ஒரு சில வாரங்களில் நமது தோல் நிறம் மாறும் என்றும், குறிப்பிட்ட ஒரு பற்பசையைப் பயன்படுத்தினால், நம்மைச் சுற்றி எப்போதும் நண்பர்கள் சூழ்ந்திருப்பர் என்றும் நமது விளம்பர உலகம் சொல்லும் எத்தனைக் கனவுகளை நாம் நம்புகிறோம்? செயல்படுத்துகிறோம்?

ஆனால், மத்தேயு நற்செய்தியில் யோசேப்பு கண்டதாகக் கூறப்படும் மூன்று கனவுகளும் கடினமானச் சூழலில், கடினமானதைச் செய்வதற்கு யோசேப்பை உந்தித் தள்ளிய சவால்கள்... திருமணத்திற்கு முன்னரே கருவுற்ற பெண்ணைத் தன் மனைவியாக ஏற்றுக்கொள்வது; ஏரோதின் பிடியிலிருந்து தப்பிக்க, பச்சிளம் குழந்தையோடும் தாயோடும் எகிப்துக்கு ஓடிச்செல்வது; மீண்டும் தன் சொந்த நாட்டுக்குத் திரும்புவது... என்று யோசேப்புக்கு வந்த எல்லாக் கனவுகளும் சிக்கலைத் தீர்ப்பதற்குப் பதில், மீண்டும் சிக்கலில் தள்ளும் கனவுகளாக இருந்தன. இருந்தாலும், இம்மூன்று கனவுகளிலும் சொல்லப்பட்டவைகளை யோசேப்பு உடனே செயல்படுத்தினார் என்று நற்செய்தி சொல்கிறது.
சிக்கலானச் சூழல்களின் நடுவிலும் தன்னை வந்தடைந்த கனவுகளை இறைவன் விடுத்த அழைப்பு என்று ஏற்றுக்கொண்டதால், அக்கனவுகளில் சொல்லப்பட்டவைகளைச் செயல்படுத்தியதால், யோசேப்பைக் கனவுகளின் காவலர் என்று அழைக்க விரும்புகிறேன். உங்களுக்கு ஆட்சேபணை இருக்காது என்று நினைக்கிறேன்.

கனவுகளின் காவலரான புனித யோசேப்பு, தன் கனவுகளை நம்பி, செயல்பட்டதால் தன்னையும், மரியாவையும், குழந்தையையும் மட்டும் காப்பாற்றவில்லை. இவ்வுலகைக் காக்கவந்த இறைவனை 'இம்மானுவேல்' ஆக நம்முடன் தங்கவைத்தார். கனவுகளை வளர்ப்போம். இன்னல்கள் நடுவிலும் நம் கனவுகளை நல்ல முறையில் புரிந்து கொள்வோம். கனவுகளைச் செயல்படுத்தி, கடவுளை நம்மோடு தங்க வைப்போம். கனவுகளின் காவலரான புனித யோசேப்பு நமக்குத் துணை புரிவாராக!








All the contents on this site are copyrighted ©.