தமிழ்நாட்டில் வீட்டுப் பணிப்பெண்களுக்கு குறைந்தபட்ச ஊதியச் சட்டம் இல்லை
டிச.21,2013. இந்தியாவில், தமிழ்நாடு உட்பட பல மாநிலங்களில் வீட்டுவேலை செய்யும் பணிப்பெண்களின்
நிலை மோசமாகவே இருக்கிறது, அவர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் தரப்படவேண்டும் என்ற சட்டம்
இல்லை என்று கூறியுள்ளார் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ரவிக்குமார். வீட்டுவேலை செய்யும்
பணிப்பெண்களின் நல்வாழ்வு குறித்து வீட்டுப்பணியாளர்கள் நலவாரியம் ஏற்கனவே கோரிக்கை ஒன்றை
உருவாக்கியதாகவும், தமிழ்நாட்டில் வீட்டுப் பணியாளர்களுக்கான குறைந்தபட்ச ஊதியச் சட்டம்
வரும் நிலையில், இது நடுத்தர வர்க்க மக்களின் எதிர்ப்பைச் சம்பாதிக்குமோ என்ற அச்சத்தால்
அந்தச் சட்டம் நிறைவேற்றப்படவில்லை எனவும் கூறினார் ரவிக்குமார். ஆனால் வேகமாக நகரமயமாகிவரும்
தமிழ்நாட்டில், வீட்டுப் பணிப்பெண்கள் நிலை பெரும்பாலும் "அரை அடிமை" என்ற நிலையிலேயே
இருப்பதாகவும், இது குறித்து யாரும் கவலைப்படுவதாகத் தெரியவில்லை எனவும் ரவிக்குமார்
கூறினார்.