2013, புலம் பெயர்ந்தோரை அதிகமாகக் கொண்டுள்ள ஆண்டு, ஐ.நா. அகதிகள் நிறுவனம்
டிச.21,2013. உள்நாட்டுக்குள்ளே புலம் பெயர்ந்தவர்கள், புதிதாக அகதிகள் நிலைக்கு உள்ளானவர்கள்
ஆகியோரின் எண்ணிக்கை இந்த 2013ம் ஆண்டில் மிக அதிகமான எண்ணிக்கையில் இருந்ததையொட்டி,
மற்ற ஆண்டுகளைவிட இவ்வாண்டு, புலம் பெயர்ந்தோரை அதிகமாகக் கொண்டுள்ள ஆண்டாகக் கணிக்கப்பட்டுள்ளது
என, ஐ.நா. அகதிகள் நிறுவனம் கூறியது. கடந்த பத்தாண்டுகளில் இவ்வாண்டின் முதல் பாதிப்பகுதி,
கட்டாயமாகப் புலம் பெயர்ந்தோரை அதிகமாகக் கொண்டிருந்த காலமாக இருந்தது என, ஐ.நா. அகதிகள்
நிறுவன இயக்குனர் வெளியிட்டுள்ள புதிய அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 2013ம்
ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் ஏறக்குறைய 59 இலட்சம் மக்கள் தங்கள் வீடுகளைவிட்டுக் கட்டாயமாக
வெளியேறினர் என்றும், கடந்த 2012ம் ஆண்டு முழுவதும் புலம் பெயர்ந்தோரின் எண்ணிக்கை 76
இலட்சமாக இருந்ததென்றும் அவ்வறிக்கை கூறுகிறது. இவ்வாண்டில் சிரியாவிலிருந்தே மக்கள்
அதிக எண்ணிக்கையில் கட்டாயமாக வெளியேறினர் என்று ஐ.நா. அகதிகள் நிறுவன அறிக்கை கூறுகிறது.