2013-12-19 17:25:57

சனிக்கிழமையன்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், உரோம் நகரில் உள்ள குழந்தை இயேசு மருத்துவமனைக்குச் செல்கிறார்


டிச.19,2013. டிசம்பர் 21, வருகிற சனிக்கிழமையன்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், உரோம் நகரில் உள்ள குழந்தை இயேசு மருத்துவமனைக்குச் சென்று, அங்கு சிகிச்சை பெற்று வரும் குழந்தைகளைச் சந்திப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
குழந்தைகளுக்கென நிறுவப்பட்டுள்ள தலை சிறந்த மருத்துவமனை என்று ஐரோப்பாவில் புகழ்பெற்று விளங்கும் குழந்தை இயேசு மருத்துவமனையில், 2600 பேர் மருத்துவர்களாகவும், மருத்துவப் பணியாளர்களாகவும் பணியாற்றுகின்றனர்.
ஓராண்டில் சராசரியாக 10 இலட்சத்திற்கும் அதிகமான குழந்தைகளுக்கு மருத்துவ உதவிகள் செய்துவரும் இம்மருத்துவமனை, 1869ம் ஆண்டு நிறுவப்பட்டு, 1924ம் ஆண்டு திருப்பீடத்தின் கண்காணிப்பில் ஒப்படைக்கப்பட்டது.
வருகிற சனிக்கிழமையன்று இம்மருத்துவமனைக்குச் செல்லும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அங்குள்ள சிற்றாலயத்திற்கு முதலில் செல்வார் என்றும், பின்னர், அங்கு தங்கி சிகிச்சைபெற்றுவரும் குழந்தைகளையும், அவர்களின் குடும்பத்தினரையும் சந்திப்பார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
குழந்தை இயேசு மருத்துவமனையை, திருத்தந்தை அவர்கள் பார்வையிடும் நிகழ்வு நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படும் என்று திருப்பீட அலுவலகம் அறிவித்துள்ளது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.