ஊடகங்களின் கவனத்தை ஈர்த்துள்ள திருத்தந்தை பிரான்சிஸ்
டிச.19,2013. டிசம்பர் 11, கடந்த புதனன்று Times வார இதழ், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை
2013ம் ஆண்டின் தலைசிறந்த மனிதர் என்று அறிவித்து, அவரது உருவத்தை தன் முன்பக்க அட்டையில்
வெளியிட்டது. இதைத் தொடர்ந்து, கடந்த ஒரு வாரத்தில், 'The New Yorker', 'The Advocate'
ஆகிய இதழ்களும் தங்கள் அட்டைப்படத்தில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் உருவத்தைப் பதித்து,
அவரைப் பற்றிய கட்டுரைகளை வெளியிட்டிருந்தது ஊடகங்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. உலகில்
உள்ள யாரையும் வெறுத்து ஒதுக்காமல், அவர்களுடன் உரையாடலை மேற்கொள்ளவேண்டும் என்று திருத்தந்தை
அவர்கள் அடிக்கடி வலியுறுத்திவருவதனால், அவர் அனைத்து ஊடகங்களின் கவனத்தையும் ஈர்த்துள்ளார்
என்று அமெரிக்க ஐக்கிய நாட்டு ஆயர்கள் பேரவையின் ஊடகத் தொடர்பாளர் அருள் சகோதரி Mary
Ann Walsh அவர்கள் கூறியுள்ளார். திருஅவையிலும், இவ்வுலகிலும் மாற்றங்கள் உருவாக வேண்டுமெனில்,
முதலில் ஒவ்வொருவரிடமும் தனிப்பட்ட முறையில் மனமாற்றம் ஏற்படவேண்டும் என்று திருத்தந்தை
அவர்கள் கூறிவருவதும் ஊடகங்களின் கவனத்தை ஈர்த்துள்ளது என்பது அருள் சகோதரி Walsh அவர்களின்
கணிப்பு.