2013-12-16 16:02:24

இறைவாக்கு உரைக்கும் பண்பு திருஅவையில் குறையும்போது, சடங்குகள் ஆற்றும் குருத்துவம் வளர்ந்துவிடும் ஆபத்து உள்ளது - திருத்தந்தை பிரான்சிஸ்


டிச.16,2013. இறைவாக்கு உரைக்கும் பண்பு திருஅவையில் குறையும்போது, சடங்குகள் ஆற்றும் குருத்துவம் வளர்ந்துவிடும் ஆபத்து உள்ளது என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறினார்.
டிசம்பர் 16, இத்திங்களன்று புனித மார்த்தா இல்லத்தின் சிற்றாலயத்தில் காலை திருப்பலியாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இறைவாக்கினர்கள் பணியை தன் மறையுரையின் மையமாக்கினார்.
கடந்த காலத்தின் வாக்குறுதிகள், நிகழ்காலத்தின் நடைமுறைகள், எதிர்காலத்தின் துணிவு என்ற மூன்று குணங்களை ஒருங்கிணைப்பவர் இறைவாக்கினர் என்பதை திருத்தந்தை விளக்கிக் கூறினார்.
வரலாறு முழுவதிலும் இறைவாக்கினர்கள் ஏற்றுக் கொள்ளப்படுவதில்லை என்பதைக் கூறியத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இயேசுவுக்கும் இதே நிலை உருவானது என்பதையும் சுட்டிக்காட்டினார்.
இறைவாக்கினர்களின் பண்புகளை அறியாமல், தாங்களே கோவிலைப் பாதுகாப்பவர்கள் என்று எண்ணியதால், 'எந்த அதிகாரத்தில் இவற்றை செய்கிறீர்?' என்று இயேசுவிடம் கோவில் குருக்கள் கேள்விகள் எழுப்பினர் என்று சுட்டிக்காட்டியத் திருத்தந்தை, இறை வாக்கு உரைக்கும் பண்பு திருஅவையிலிருந்து குறையும்போது, கோவில் குருத்துவம் அதிக சக்திபெறும் என்பதையும் தெளிவுபடுத்தினார்.
இதற்கிடையே, கிறிஸ்துவர்கள் இல்லாத மத்தியக் கிழக்குப் பகுதியை நாம் எண்ணிப் பார்க்க இயலாது, ஒவ்வொரு நாளும் அமைதிக்காக வேண்டுவோம் என்ற Twitter செய்தியை, டிசம்பர் 16, இத்திங்களன்று 9 மொழிகளில் வெளியிட்டார் திருத்தந்தை.
மேலும், டிசம்பர் 17, இச்செவ்வாயன்று, தன் 77வது பிறந்தநாளைச் சிறப்பிக்கும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுக்கு நம் மனம்கனிந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.