போராட்டதாரர்மீதான வன்முறை கவலை தருகிறது, உக்ரெய்ன் ஆயர்கள்
டிச.14,2013. உக்ரெய்ன் நாட்டில் இடம்பெறும் பெரிய அளவிலான மக்கள் போராட்டங்களை ஒடுக்குவதற்கு
பாதுகாப்புப் படைகளை அரசு பயன்படுத்தும்விதம் தங்களுக்கு ஆழ்ந்த கவலையை அளிப்பதாக, அந்நாட்டின்
கத்தோலிக்கத் தலைவர்கள் கூறினர். உக்ரெய்ன் நாட்டுக்காகவும், குடிமக்கள் அனைவரின்
மாண்புக்காகவும் அமைதியாகப் போராடிவரும் மக்களுக்குத் தங்கள் ஆதரவையும், ஒருமைப்பாட்டுணர்வையும்
தெரிவிப்பதாகக் குறிப்பிட்டுள்ளனர் அந்நாட்டின் கிரேக்க-கத்தோலிக்கத் திருஅவைத் தலைவர்கள். உக்ரெய்ன்
நாட்டின் தலைநகர் Kiev சுதந்திர வளாகத்தில் போராடிவரும் மக்களில் குறைந்தது 9 பேர் கைது
செய்யப்பட்டுள்ளனர் எனவும், இப்போராட்டதாரர்மீது காவல்துறை வன்முறையைப் பயன்படுத்தியிருப்பதாகவும்
செய்திகள் கூறுகின்றன. ஐரோப்பிய சமுதாய அவையோடு ஒரு பெரிய பொருளாதாரப் பங்கீட்டு ஒப்பந்தத்தில்
கையெழுத்திடப் போவதில்லை என, கடந்த நவம்பர் 21ம் தேதி, உக்ரெய்ன் நாடு அறிவித்ததைத் தொடர்ந்து
பொது மக்கள் போராட்டங்களில் இறங்கியுள்ளனர்.