டிச.12,2013. "மகிழ்வற்ற ஒரு திருஅவையை நாம் எண்ணிப்பார்க்க இயலாது. இயேசுவின் பெயரைப்
பறைசாற்றுவதே திருஅவையின் மகிழ்வு" என்ற வார்த்தைகளை தன் Twitter செய்தியாக திருத்தந்தை
பிரான்சிஸ் அவர்கள் டிசம்பர் 12, இவ்வியாழன் வெளியிட்டார். 12.12.12, அதாவது, 2012ம்
ஆண்டு டிசம்பர் 12ம் தேதி முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்கள் தன் முதல் Twitter
செய்தியை வெளியிட்டதன் முதல் ஆண்டு நிறைவை இவ்வியாழன் நினைவுக் கூருகிறோம். இந்த
ஓராண்டில் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களும் ஒவ்வருநாளும்
இத்தாலியம், லத்தீன், இஸ்பெயின், போலந்து, ஆங்கிலம், ஜெர்மன், போர்த்துகீஸ், பிரெஞ்ச்,
அரபு ஆகிய ஒன்பது மொழிகளில் தங்கள் Twitter செய்திகளை வெளியிட்டு வருகின்றனர். @pontifex
என்ற இணைய முகவரி வழியாக வெளியிடப்படும் திருத்தந்தையின் Twitter செய்திகளை 11,000,000
பேர் பின் தொடர்கின்றனர் என்றும், அவர்கள் தங்கள் நண்பர்களுடன் இச்செய்திகளைப் பகிர்ந்து
கொள்வதன் வழியாக, திருத்தந்தையின் செய்திகள் ஏறத்தாழ 60,000,000 பேரைச் சென்றடைகின்றன
என்று திருப்பீடத்தின் சமூகத் தொடர்பு அவையின் தலைவரான பேராயர் Claudio Maria Celli அவர்கள்
குறிப்பிட்டுள்ளார். மேலும், திருத்தந்தையைச் சந்தித்த 17 நாடுகளின் தூதர்களைத் திருப்பீடம்
அன்புடன் வரவேற்கிறது என்ற செய்தியை திருப்பீடச் செயலரின் அலுவலகம் தன் Twitter செய்தியாக,
டிசம்பர் 12, இவ்வியாழனன்று வெளியிட்டது.