2013-12-11 15:36:57

மண்டேலா அவர்கள், நமக்கெல்லாம் நல்லதொரு வழிகாட்டி - இந்திய ஆயர் பேரவையின் தலைவர்


டிச.11,2013. 27 ஆண்டுகள் சிறை வாழ்வை கண்ணியத்தோடும், துணிவோடும் மேற்கொண்ட நெல்சன் மண்டேலா அவர்கள், அமைதி, அன்பு, ஒப்புரவு என்ற உயர்ந்த விழுமியங்களை வாழ்வில் பின்பற்றினார் என்று இந்திய கர்தினால் ஆஸ்வால்ட் கிரேசியஸ் அவர்கள் கூறினார்.
மறைந்த தலைவர் நெல்சன் மண்டேலா அவர்களுக்கு, டிசம்பர் 10, இச்செவ்வாயன்று நடைபெற்ற நினைவு வழிபாட்டையொட்டி மும்பை பேராயர் கர்தினால் கிரேசியஸ் அவர்கள் ஆசிய செய்திக்கு அளித்த ஒரு குறிப்பில் இவ்வாறு கூறினார்.
நீண்ட காலம் அநீதியான முறையில் சிறை வாழ்வுக்கு உள்ளாக்கப்பட்டாலும், மனதில் கசப்பையும், பழி உணர்வுகளையும் வளர்க்காமல், அமைதி ஒன்றையே தன் வாழ்வின் குறிக்கோளாகக் கொண்டு வாழ்ந்த மண்டேலா அவர்கள், நமக்கெல்லாம் நல்லதொரு வழிகாட்டி என்று இந்திய ஆயர் பேரவையின் தலைவரான கர்தினால் கிரேசியஸ் அவர்கள் கூறினார்.
பல்வேறு உலகத் தலைவர்கள் கூடிவந்து மண்டேலா அவர்களுக்கு மரியாதை செலுத்தும் வேளையில், இந்திய கத்தோலிக்கத் திருஅவையும் தன் மரியாதையையும் வருத்தத்தையும் வெளியிடுகிறது என்று கர்தினால் கிரேசியஸ் தன் செய்தியில் எடுத்துரைத்தார்.

ஆதாரம் : AsiaNews








All the contents on this site are copyrighted ©.