உலக அமைதிக்காக கினி பிசாவ் நாட்டில் தேசிய செபம் மற்றும் உண்ணா நோன்பு
டிச.10,2013. உலகிலும், ஆப்ரிக்காவிலும், கினி பிசாவ் நாட்டிலும் அமைதி இடம்பெறவேண்டி,
டிசம்பர் 13ம் தேதியை, தேசிய செபம் மற்றும் உண்ணா நோன்பு நாளாகக் கடைப்பிடிக்குமாறு கினி
பிசாவ் கத்தோலிக்க ஆயர்கள் கேட்டுள்ளனர். உண்மை, நீதி மற்றும் ஒப்புரவால் அமைக்கப்பட்ட
வாழ்வு வழியாக அமைதியை அனைவரும் ஏற்கும் நோக்கத்தில், அனைத்து மறைமாவட்டங்களுக்கும் இவ்வழைப்பு
முன்வைக்கப்பட்டுள்ளது என, அந்நாட்டின் ஆயர்கள் கூறினர். திருவருகைக் காலத்தின் உணர்வில்,
இந்தத் தேசிய செபம் மற்றும் உண்ணா நோன்பு நாளைக் கடைப்பிடிக்குமாறும் கேட்டுள்ள ஆயர்கள்,
ஹையான் புயலால் பாதிக்கப்பட்டுள்ள பிலிப்பீன்ஸ் நாட்டு மக்களுக்காக, இம்மாதம் 22ம் தேதிவரை
நிதி சேகரிக்கப்பட்டு வருவதாகவும் பீதெஸ் செய்தி நிறுவனத்திடம் கூறியுள்ளனர். உலகத்
தலைவர்களும், ஆப்ரிக்கர்களும், கினி பிசாவ் மக்களும், ஏழைகளிலும் கடும்ஏழ்மை நிலையில்
இருப்பவர்களை நினைத்துப் பார்க்குமாறு கேட்டுள்ள கினி பிசாவ் கத்தோலிக்க ஆயர்கள், மக்களாட்சி
உணர்வு ஒவ்வொருவரின், குறிப்பாக, அரசியல்வாதிகள் மற்றும் இராணுவத்தினரின் இதயங்களை நிறைக்க
வேண்டுமெனவும் வலியுறுத்தியுள்ளனர்.