உலக வர்த்தக நிறுவனத்தின் புதிய வர்த்தகச் சீர்திருத்த ஒப்பந்தம் வரலாற்று சிறப்புமிக்கது,
பேராயர் தொமாசி
டிச.07,2013. உலக வர்த்தக நிறுவனம் கொண்டுவந்துள்ள வர்த்தகச் சீர்திருத்த ஒப்பந்தம்,
வரலாற்று சிறப்புமிக்கது என்றும், உலகின் தாராளமயமாக்கல் ஏழை நாடுகளுக்கும் உதவும் வகையில்
அமைக்கப்பட்டுள்ளது என்றும் பாராட்டிப் பேசினார் உலக வர்த்தக நிறுவனத்துக்கான திருப்பீடத்தின்
நிரந்தரப் பார்வையாளர் பேராயர் சில்வானோ தொமாசி இந்தோனேசியாவின் பாலி தீவிலுள்ள சுரபயா
நகரில் நடந்த நான்கு நாள்கள் ஐ.நா. மாநாடு குறித்து இச்சனிக்கிழமையன்று வத்திக்கான் வானொலிக்குப்
பேட்டியளித்த பேராயர் தொமாசி, 2001ம் ஆண்டில் தோகாவில் கொண்டுவரப்பட்ட ஒப்பந்தத்தை அமல்படுத்துவதாக
தற்போதைய ஒப்பந்தம் உள்ளது எனத் தெரிவித்தார். பொதுச்சந்தை மனிதருக்குப் பணி செய்வதாய்
அமைய வேண்டுமென, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தனது அண்மை மறைத்தூது அறிக்கையில் கேட்டிருப்பதற்கேற்ப,
இம்மாநாட்டில் நாடுகளின் அமைச்சர்கள் கொண்டுவந்துள்ள உடன்பாடு, திருஅவையின் சமூகக் கோட்பாடுகளோடு
ஒத்திணங்குவதாக உள்ளது எனத் தரிவித்தார். உலக வர்த்தக நிறுவனம் உருவாக்கப்பட்ட 1995ம்
ஆண்டுக்குப் பின்னர் தற்போது முதல்முறையாக, சிறப்பான வர்த்தகச் சீர்திருத்த ஒப்பந்தம்
ஒன்று கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் பேராயர் கூறினார். 159 நாடுகளின் அமைச்சர்கள் மற்றும்
அதிகாரிகள் பங்கேற்ற இந்த உலக வர்த்தக அமைப்பு மாநாட்டில் இந்தியாவின் சார்பில், மத்திய
தொழில் மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் ஆனந்த் சர்மா தலைமையிலான 30 பேர் கொண்ட குழு
பங்கேற்றது.