டிச.06,2013. இறைவார்த்தை முன்வைக்கும் மறைபோதகச் சவாலை மீண்டும் தட்டியெழுப்பும் நோக்கத்தில்,
விவிலிய மறைப்பணி மற்றும் நற்செய்தியைப் புதிய வழியில் அறிவிப்பது குறித்த கருத்தரங்கை
தாய்லாந்தின் பட்டாயாவில் நடத்தி வருகிறது ஆசிய ஆயர் பேரவைகளின் கூட்டமைப்பு. இவ்வியாழனன்று
தொடங்கியுள்ள இம்மூன்று நாள் கருத்தரங்கு, புதிய நற்செய்தி அறிவிப்புப்பணி குறித்த திருத்தந்தை
பிரான்சிஸ் அவர்களின் “Evangelii gaudium” என்ற அண்மை மறைத்தூது அறிக்கையை மையமாக வைத்து
இடம்பெறுவதாக, ஆசிய ஆயர் பேரவைகளின் கூட்டமைப்பின் இயக்குனர் அருள்பணி ஜாக்கப் தெக்கனாத்
கூறினார். மேலும், முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களின் இறைவார்த்தை குறித்த
“Verbum Domini” மறைத்தூது அறிக்கையை வைத்தும் இக்கருத்தரங்கில் கலந்துரையாடல்கள் இடம்பெறுகின்றன
எனவும் அருள்பணி தெக்கனாத் மேலும் கூறினார். இச்சனிக்கிழமையன்று நிறைவடையும் இக்கருத்தரங்கில்
ஆயர்கள், குருக்கள், துறவறத்தார், பொதுநிலையினர் என அனைத்து மட்டங்களிலிருந்தும் கலந்துகொள்கின்றனர்.