உலகில் சித்ரவதைகளிலிருந்து கிறிஸ்தவர்களைக் காப்பாற்ற இங்கிலாந்து அரசிடம் விண்ணப்பம்
டிச.,05,2013. உலகில் கிறிஸ்தவர்கள் சித்ரவதைப்படுத்தப்படுவதைத் தடுக்கும் நோக்கில் தங்கள்
வெளிநாட்டுக் கொள்கைகளையும், வெளிநாட்டு உதவித்திட்டங்களையும் இங்கிலாந்து அரசு வகுக்க
வேண்டும் என அழைப்புவிடுத்துள்ளனர் அந்நாட்டு பாராளுமன்ற அங்கத்தினர்கள். மதப்பாகுபாடின்றி
அனைவரும் நீதியுடன் நடத்தப்படவேண்டும் என்பதே தங்கள் நோக்கம் எனினும், இன்றைய உலகில்
அதிக அளவில் சித்ரவதைகளை அனுபவிப்பது கிறிஸ்தவர்கள் என்பதால், கிறிஸ்தவர்கள் சார்பாக
இங்கிலாந்து அமைச்சரவையில் இந்த விண்ணப்பத்தை முன்வைப்பதாக தெரிவித்தனர் பாராளுமன்ற அங்கத்தினர்கள். கிறிஸ்தவர்கள்
என்ற ஒரே காரணத்திற்காக நைஜீரியா முதல் எரிட்ரியா வரையிலும், காஜாக்கிஸ்தான் முதல் சீனா
வரையிலும் எண்ணற்றோர் சிறையிலடைக்கப்பட்டுள்ளதாக உரைத்த இங்கிலாந்து பாராளுமன்ற அங்கத்தினர்
சம்மி வில்சன், இவர்கள் வழக்குரைஞர்களைச் சந்திக்கவோ, குற்றம் குறித்து அறிந்துகொள்ளவோ
அனுமதிக்கப்படுவதில்லை எனவும் கவலையை வெளியிட்டார்.