தமிழகத்தில் 8.5 இலட்சம் விவசாயிகள் வேறு தொழில்களுக்கு மாற்றம்
டிச.04,2013. தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகளில் 8 இலட்சத்து 50 ஆயிரம் விவசாயிகள், உழவுத்தொழிலை
விட்டு, வேறு தொழில்களுக்கு மாறியுள்ளது ஆய்வில் தெரியவந்துள்ளது. விவசாயிகளுக்குத்
தேவையான இடுபொருட்கள் மற்றும் மானியங்களை நேரடியாக வழங்க, மத்திய அரசு திட்டமிட்டுள்ளதையடுத்து
எடுக்கப்பட்ட ஆய்வில், கடந்த 10 ஆண்டுகளில் மாநிலம் முழுவதும் 8 இலட்சத்து 50 ஆயிரம்
விவசாயிகள், விவசாயத்தைவிட்டு, வேறு தொழில்களுக்கு மாறியிருப்பது தெரியவந்துள்ளது. மேலும்,
போதிய மழை இல்லாதது, விவசாய நிலங்களை வீட்டுமனைகளாக்கி விற்பது இதற்கு காரணமாக அவ்வாய்வில்
கண்டறியப்பட்டுள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளாக, தமிழகத்தில் கடும் வறட்சி நிலவுவதால்
சாகுபடியும் வெகுவாகக் குறைந்து வருகிறது. இதனால் உணவு உற்பத்தி குறையும் அபாயமும் ஏற்பட்டுள்ளது
குறிப்பிடத்தக்கது.