ஈரானின் அணுத்திட்டம் தொடர்பாக ஏற்பட்டுள்ள உடன்பாட்டுக்கு அமெரிக்க ஆயர் பேரவை பாராட்டு
டிச.03,2013. சர்ச்சைக்குரிய ஈரானின் அணுத்திட்டம் தொடர்பாக, மேற்கத்திய நாடுகளுக்கும்
ஈரானுக்கும் இடையில் ஓர் உடன்பாடு ஏற்பட்டுள்ளதை வரவேற்றுள்ளார் அமெரிக்க ஐக்கிய நாட்டு
ஆயர் பேரவையின் நீதி மற்றும் அமைதிப் பணிக்குழுத் தலைவர் ஆயர் Richard Pates. இவ்வுடன்பாடு
தொடர்பாக அமெரிக்க ஐக்கிய நாட்டுச் செயலர் John Kerryக்குப் பாராட்டுக் கடிதம் எழுதியுள்ள
ஆயர் Pates, ஈரானுடன் தொடர்ந்து அயராது நடத்திய உரையாடலின் பயனாக இவ்வுடன்பாடு ஏற்பட்டுள்ளது
என்று குறிப்பிட்டுள்ளார். இராணுவ நடவடிக்கையைவிட, தூதரக ரீதியில் இடம்பெற்ற உரையாடல்
ஈரான்மீதான எதிர்மறை நடவடிக்கையைத் தவிர்த்துள்ளது எனவும் ஆயரின் கடிதம் கூறுகிறது. ஈரான்,
தனது அணுத் திட்டம் குறித்து 1996ம் ஆண்டு முதல் ஐ.நா. பாதுகாப்பு அவையிலுள்ள பிரிட்டன்,
சீனா, பிரான்ஸ், இரஷ்யா, அமெரிக்க ஐக்கிய நாடு ஆகிய 5 நாடுகளுடனும் ஜெர்மனியுடனும் பேச்சுவார்த்தையில்
ஈடுபட்டுள்ளது. ஜெனீவாவில் அண்மையில் நடைபெற்ற கூட்டத்தில் தெஹ்ரானின் அணுத்திட்டம்
தொடர்பில் உடன்படிக்கை ஒன்று கையெழுத்திடப்பட்டது.