2013-12-02 15:05:25

வாரம் ஓர் அலசல் – ஒழித்துக் கட்டுவோம்


டிச.02,2013. RealAudioMP3 ஓர் அடர்ந்த காட்டில் நரி நீர் தேடி அலைந்தது. ஓரிடத்தில் நீர் நிலையைக் கண்டு மகிழ்ச்சியடைந்தது. அந்த நீர்நிலையில் முதலை இருக்குமோ என்ற அச்சத்தில் ஒரு பெரிய கல்லை உருட்டிவிட்டது. கல் தண்ணீரில் விழுந்த சத்தத்தில் சிலிர்த்துச் சீறி எழுந்த முதலை, கரையில் நின்றுகொண்டிருந்த நரியின்மீது பாய்ந்தது. நரி சாமார்த்தியமாகத் தப்பித்துக் கொண்டது. நன்றி முதலையாரே, நல்லவேளை உன்னிடமிருந்து இறைவன் என்னைக் காப்பாற்றிவிட்டார் என்றது நரி. நீ சொல்வது சரிதான். நீ தரையில் வேட்டையாடி உயிர் வாழ்கிறாய். நான் நீருக்குள் வேட்டையாடி உயிர் வாழ்கிறேன். உனது அறிவு எனக்குப் பிடித்திருக்கிறது. உனது நட்பு எனக்குத் தேவை என்றது முதலை. நரிக்கு முதலையைப் பிடிக்கவில்லையென்றாலும், ஒப்புக்குச் சரி என்றது. ஆயினும் ஒரு நிபந்தனை போட்டது. நான் இங்கு தண்ணீர்க் குடிக்க வரும்போதெல்லாம் நீ தரைக்கு வந்துவிட வேண்டும் என்றது நரி. அன்றுமுதல் நரி வரும்போதெல்லாம் முதலை தரைக்கு வந்து ஒதுங்கி நிற்கும். நரியும் தண்ணீர்க் குடித்துச் செல்லும்.
ஒருநாள் முதலை நரியிடம், இங்கு ஓர் அறிவாளிக் குரங்கு இருக்கிறது. அது மரத்தில் அமர்ந்துகொண்டு ஒரு மூங்கில் குச்சியை நீட்டி அதன்வழியாக தண்ணீரை உறிஞ்சிக் குடிக்கின்றது. இந்த அறிவாளியின் ஈரலைச் சாப்பிட எனக்கு ஆசை. எப்படியாவது அதனை இங்கே அழைத்துவா என்றது. முதலையின் தந்திரத்தைப் புரிந்துகொண்ட நரி, இந்த முதலை அறிவாளிகளை அழித்துவிட நினைக்கிறது, கொல்லப்பட வேண்டியது முதலைதான் என எண்ணி குரங்கைத் தேடிச் சென்றது. பின்னர் நரியும் குரங்கும் ஓர் இரகசியத் திட்டம் தீட்டின. குரங்கு நரியிடம், இந்த முதலை தண்ணீருக்குள் இருக்கும்வரைதான் அதற்குப் பலம். அதை வெளியே அழைத்துவா என்றது. அப்படியே நரியும் சென்று முதலையிடம், நண்பா, வேட்டைக்காரன் என்னைச் சுட்டுவிட்டான், நான் சாகப்போகிறேன், என்னைக் காப்பாற்று என்றது. தரையில் கால்களை உதறிக்கொண்டிருந்த நரியைக் காப்பாற்ற வேகமாக வந்தது முதலை. அப்பொழுது வேகமாக ஓடிவந்த குரங்கு முதலையின் கழுத்தில் வைர மாலையைப் போட்டுவிட்டு ஓடியது. குரங்கின் செயலை வியந்து அதையே பார்த்துக்கொண்டிருந்த முதலையின் கழுத்தில் வைர மாலையைக் கண்டு, அம்மாலையைத் தேடிவந்த பண்ணைவீட்டுப் பணியாளர்கள் முதலையைக் கொன்று அதனை எடுத்துச் சென்றனர். கயவனை ஒழித்துக்கட்டிய நிம்மதியில் நரியும், குரங்கும் நிம்மதியாகத் தினமும் அந்த நீர்நிலையில் நீர் குடித்து வந்தன.
அன்பு நேயர்களே, இன்றைய உலகில் தனிப்பட்டவர் வாழ்விலும், சமுதாய வாழ்விலும், ஒழித்துக்கட்டப்படவேண்டிய விடயங்கள் பல உள்ளன. இஞ்ஞாயிறு நண்பகல் மூவேளை செப உரையில் திருத்தந்தை பிரான்சிஸ், இந்த உலகில் அனைத்து ஆயுதங்களும் வேலைக்கு உதவும் கருவிகளாக மாற்றப்படுவதற்கு அவைகள் அனைத்தும் களையப்பட்டால் அந்த நாள் எவ்வளவு பெரிய நாளாக இருக்கும் என்று கூறினார். உலகின் இறுதி நாள்களில், பல இன மக்கள் தங்கள் வாள்களைக் கலப்பைக் கொழுக்களாகவும், தங்கள் ஈட்டிகளைக் கருக்கரிவாள்களாகவும் அடித்துக்கொள்வார்கள். ஓர் இனத்துக்கு எதிராக மற்றோர் இனம் வாள் எடுக்காது. அவர்கள் இனி ஒருபோதும் போர்ப்பயிற்சி பெறமாட்டார்கள் என்ற எசாயா இறைவாக்கு விவிலிய வசனங்களைக் குறிப்பிட்டு உலகில் போர்கள் முடிவுக்கு வரட்டும் என அழைப்புவிடுத்தார் திருத்தந்தை. அமைதியின் அரசராம் இயேசு ஆண்டவரின் திருவருகை போர்கள் முடியும் என்ற நம்பிக்கையை நமக்கு ஊட்டுகின்றது என்றும் திருத்தந்தை பிரான்சிஸ் கூறினார்.
RealAudioMP3 ஆயுதப் போர்களுடன் அணு உலைகளையும், சுற்றுச்சூழல் கேடுகளையும், பலவகை உயிர்க்கொல்லி நோய்களையும் ஒழிக்கவேண்டிய கட்டாயத்தில் நாம் உள்ளோம். எய்ட்சை ஒழித்துக் கட்டுவோம், புதிய எச்.ஐ.வி. பாதிப்பு வராமல் தடுப்போம், பாகுபாட்டை முற்றிலும் ஒழிப்போம், எய்ட்சால் இறப்பு ஏற்படாத ஒரு நிலையை உருவாக்குவோம் என்ற மையக்கருத்துடன் டிசம்பர் 01, இஞ்ஞாயிறன்று உலகெங்கும் எய்டஸ் தினம் கடைப்பிடிக்கப்பட்டது. நேயர்களாகிய உங்களில் பலர் இந்த விழிப்புணர்ச்சி நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டிருப்பீர்கள். 2011ம் ஆண்டு முதல் 2015ம் ஆண்டு வரை இதே மையக் கருத்துடன் இத்தினம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இன்று உலகை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் மிகக் கொடூரமான எய்ட்ஸ் நோய் குறித்த விழிப்புணர்வு ஒவ்வோர் ஆண்டும் டிசம்பர் முதல் தேதியன்று ஏற்படுத்தப்பட்டு வருகிறது. 1981ம் ஆண்டு டிசம்பர் முதல் தேதிதான் அமெரிக்க நோய்க் கட்டுப்பாட்டு மற்றும் தடுப்பு மையங்களில் எய்ட்ஸ் நோய்க் கிருமி கண்டறியப்பட்டது. 1983ல் Robert Gallo, Luc Antoine Montagnier என்ற ஆய்வாளர்கள் எச்ஐவி கிருமிக்கு முதலில் எல்ஏவி, எச்ஐவி3 என்று பெயர் வைத்தனர்.
எச்.ஐ.வி எனும் நுண்கிருமியால்தான் எய்ட்ஸ் ஏற்படுகிறது. எய்ட்ஸ் நோய், மனிதரின் இரத்தத்தில் உள்ள வெள்ளையணுக்களைத் தாக்கி அழித்து படிப்படியாக மரண வாசலுக்கு அழைத்துச் செல்கிறது. ஒருவர் எச்.ஐ.வியுடன் பல ஆண்டுகாலம் வாழ முடியும். ஆனால், அவர் உடலில் நோய் எதிர்ப்புத் தன்மையை இழக்கும் போதுதான் எய்ட்ஸ் நோயாளியாகிறார். ஓர் ஆண்டுக்குள் ஏராளமான நோய்கள் ஒன்றன் பின் ஒன்றாக தொற்றிக் கொள்ளும் நிலை இந்நோயாளிக்கு ஏற்படுகிறது. எச்.ஐ.வி தாக்கப்பட்ட அனைவரும் எய்ட்ஸ் நோயாளி என்று கூறிவிட முடியாது. ஆனால், எச்.ஐ.வி தொற்று உள்ளவர்கள் அனைவரும் எய்ட்ஸ் நோயாளியாக மாறுகிறார்கள். எச்.ஐ.வியால் தாக்கப்பட்டவர் 3 ஆண்டு முதல் 10 ஆண்டுகள் வரை அந்நோய்க்கான அறிகுறிகள் பற்றி தெரியாமலேயே வாழ்வர். அதேசமயம் எய்ட்ஸ் நோய்க்குரிய அறிகுறிகள் தென்படும்போதுதான் அவருக்குள் மறைந்திருந்த ஆபத்தை உணர முடியும். எச்.ஐ.வி., நோய்க் கிருமிகள் எவ்வாறு பரவுகின்றன, இவற்றின் பாதிப்பு இல்லாமல் எப்படி வாழலாம் என விவரிக்கிறார் அருள்சகோதரி மருத்துவர் கொன்ராட். திருச்சி மரியின் ஊழியர் சபையைச் சார்ந்த அருள்சகோதரி கொன்ராட், திருச்சி பாத்திமா நகரிலுள்ள அச்சபையின் எய்ட்ஸ் நோயாளர் பராமரிப்பு இல்லத்துக்கும் பொறுப்பாளர். RealAudioMP3
எச்.ஐ.வி நுண்கிருமி மேற்கு, மத்திய ஆப்ரிக்க நாடுகளில் உள்ள மக்கள் இடையே அதிகளவில் பரவி இருப்பது முதலில் கண்டறியப்பட்டது. ஆனால், இந்தியப் பழங்கால பாரம்பரிய சித்த மருத்துவ குறிப்புகளில் இந்நோய் குறித்து காணப்படுகிறது. இந்நோய் பண்டை காலத்தில் மன்னர்களை பாதித்துள்ளது என்றும், இதற்கு ராஜநோய் என்றும் பெயர் சூட்டியிருந்தனர் என, பழம்பெரும் ஏடுகள் கூறுகின்றன. இந்தக் கொடிய எய்ட்ஸ் நோய் அந்தமானியர் என்ற ஓர் இனத்தையே அழித்துள்ளதாகவும் சொல்லப்படுகிறது. 2012ம் ஆண்டின் கணக்கின்படி, உலகளவில் 3 கோடியே 53 இலட்சம் பேரும், இந்தியாவில் 24 இலட்சம் பேரும் எச்.ஐ.வி. நோய்க் கிருமிகளுடன் வாழ்ந்துகொண்டிருக்கின்றனர். தற்போது தமிழ்நாட்டில் 1 லட்சத்து 32 ஆயிரத்து 590 பேர் எய்ட்சால் பாதிக்கப்பட்டுள்ளனர். உலகில் எச்.ஐ.வி நோய்க்கிருமிகளுடன் வாழ்வோரில் 97 இலட்சத்துக்கு மேற்பட்டோர் 2012ம் ஆண்டில் அதற்கான சிகிச்சையைப் பெற்றுள்ளனர்.
உலகில் எச்.ஐ.வி மற்றும் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ள, குறிப்பாக இந்நோயாளிச் சிறாருடன் தனது ஒருமைப்பாட்டுணர்வைத் தெரிவித்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ். இஞ்ஞாயிறு மூவேளை செப உரைக்குப் பின்னர் இவ்வாறு கூறிய திருத்தந்தை, இந்நோயாளிகள் மத்தியில் பணிசெய்யும் அனைவருக்காகச் செபிக்குமாறும் கேட்டதோடு, இந்நோயாளிகளுக்குத் தேவையான சிகிச்சைகள் எவ்விதப் பாகுபாடின்றி வழங்கப்படுமாறும் கேட்டுக்கொண்டுள்ளார்.
RealAudioMP3 அன்பர்களே, இன்றும் நம் மத்தியில் பெரும்பாலான மக்கள், எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட மக்களைக் கண்டால் பயம் அடைகின்றனர். எய்ட்ஸ் நோய்க் குறித்த அறியாமையே இதற்குக் காரணம். இந்நோய், சாதாரணமாக சமூக பழக்கவழக்கங்களின் மூலம் பரவாது. கைகுலுக்குதல், தொடுதல், கட்டியணைத்தல் மற்றும் முத்தம் மூலம் பரவாது. பொதுக்கழிப்பறைகள், படுக்கைகள் மற்றும் அவர்கள் பயன்படுத்திய உணவுப் பாத்திரங்கள் மூலம் பரவாது. நீச்சல் குளம் மற்றும் முடிதிருத்தம் செய்யும் கடைகள் மூலம் பரவாது. இருமல், தும்மல் மற்றும் கொசுக்கடி மூலமும் பரவாது. ஆதலால் இந்நோயாளிகளை ஒதுக்கி வைக்காமல் இவர்களிடம் பரிவுடன் நடந்துகொள்ள வேண்டும். இவர்களுக்கு நம் ஆதரவும், அன்பும், அக்கறையும் தேவைப்படுகின்றன. இவர்கள் மீதிருக்கும் தவறான கருத்துக்களை வெளிச்சத்திற்கு கொண்டுவர வேண்டும். இவர்களுக்கு சம உரிமை அளித்து இவர்கள் தன்னம்பிக்கையில் வளர உதவிட வேண்டும்
மொத்தத்தில், நமது உடலின் நலனுக்கு ஊட்டச்சத்து நிறைந்த உணவையே உட்கொள்ள வேண்டும். இதன் மூலமாக நாம் நம்மைப் பாதிக்கும் நோய்களிடம் இருந்து பாதுகாத்து கொள்ளலாம். நம் தனிப்பட்ட மற்றும் சமுதாய வாழ்வில் நல்ல ஒழுக்கத்துடனும், சீரிய சிந்தனைகளுடனும், நேர்மறை எண்ணங்களுடனும் வாழ்ந்து, ஒழிக்கவேண்டியவைகளை ஒழித்துக்கட்டுவோம்.










All the contents on this site are copyrighted ©.