2013-12-02 16:53:50

திருத்தந்தை : போர் ஆயுதங்களைக் கைவிட்டு, அவைகளை உழைப்பின் கருவிகளாக மாற்றுவோம்


டிச.02,2013. போர் ஆயுதங்களைக் கைவிட்டு, அவைகளை உழைப்பின் கருவிகளாக மாற்றும் காலத்திற்காக இறைவனை நோக்கி வேண்டுவோம் என இஞ்ஞாயிறு மூவேளை செப உரையின்போது அழைப்புவிடுத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.
வாள்கள் கலப்பைக்கொழுக்களாகவும், ஈட்டிகள் அரிவாள்களாகவும் மாற்றப்படும், இனிப் போரோ போர்ப்பயிற்சியோ இருக்காது என்ற எசாயா இறைவாக்கினரின் வரிகளை எடுத்தியம்பிய திருத்தந்தை பிரான்சிஸ், இத்தகைய ஒருநாள் என்று இடம்பெறும் என்ற கேள்வியையும், தூய பேதுரு வளாகத்தில் கூடியிருந்த மக்களிடையே முன்வைத்தார்.
நம்பிக்கையின் விடியலை நோக்கிச் சென்றுகொண்டிருக்கும் நாம், நல்மேய்ப்பராம் இயேசுவோடு இணைந்து இறையரசின் நிறைவை நோக்கி வரலாற்றில் பயணம்செய்வோம் என்றும் விண்ணப்பித்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.
வார்த்தை மனுவானார், அவரே நம் இறுதிக் குறிக்கோள், அவரின் ஒளியிலேயே அனைத்து நாடுகளும் நீதி மற்றும் அமைதியின் அரசை நோக்கி நடைபோடுகின்றன என மேலும் கூறிய திருத்தந்தை பிரான்சிஸ், இப்பாதையில் அன்னைமரி நம் எடுத்துக்காட்டாக உள்ளார் எனவும் கூறினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.