செபத்திலும் நற்செயல்களிலும் இயேசுவை நாம் சந்திக்கிறோம்
டிச.02,2013. உரோம் மறைமாவட்ட ஆயர் என்ற முறையில் இஞ்ஞாயிறன்று மாலை அந்நகரின் புனித
அலக்சாந்திரியாவின் சிரில் பங்குதளத்தை சந்தித்து, திருப்பலி நிறைவேற்றி ஏழு சிறார்க்கு
உறுதிபூசுதல் என்ற திருவருட்சாதனத்தை வழங்கினார் திருத்தந்தை பிரான்சிஸ். உலக முடிவில்
அல்ல, மாறாக, ஒவ்வொரு நாளும் செபத்தில் நாம் இயேசுவைச் சந்திக்கிறோம் என இப்பங்குத்தள
மறையுரையில் எடுத்துரைத்த திருத்தந்தை பிரான்சிஸ், செபத்திலும், ஒவ்வொரு நல்ல காரியங்களை
நிறைவேற்றும்போதும், ஏழைகளுக்கு உதவும்போதும், நோயாளிகளைச் சந்திக்கும்போதும் நாம் இயேசுவைச்
சந்திக்கின்றோம் என எடுத்துரைத்தார். இன்றையை திருப்பலியிலும் நாம் இயேசுவைச் சந்தித்து,
ஒன்றிணைந்து பயணம் செய்கின்றோம், நாம் பாவிகள் என அஞ்சத் தேவையில்லை, ஏனெனில் பாவிகளைத்
தேடியே இயேசு வந்தார் எனவும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ். கிறிஸ்தவ வாழ்வு எனும்
பயணத்தில் சகோதரர்களாக ஒன்றிணைந்து ஒருவரையொருவர் அன்புகூர்ந்து நடைபோடுவோம் எனவும் திருத்தந்தை
பிரான்சிஸ் அப்பங்குத்தள மக்களிடம் கேட்டுக்கொண்டார்.