2013-11-30 16:16:19

திருவருகைக் காலத்தின் முதலாம் ஞாயிறு : ஞாயிறு சிந்தனை


RealAudioMP3 இன்று திருவருகைக் காலத்தின் முதல் ஞாயிறு. ஒவ்வோர் ஆண்டும், திருவருகைக் காலம் ஒரு புதிய வழிபாட்டு ஆண்டைத் துவக்குகிறது. திருவருகைக் காலம் என்றதுமே, கிறிஸ்மஸ் விழாவுக்கான ஏற்பாடுகள் களைகட்டத் துவங்கிவிடும். திருஅவை கொண்டாடும் அனைத்து விழாக்களிலுமே கிறிஸ்மஸ் விழா, தனியிடம் பெறுகிறது, ஏராளமான மகிழ்வைக் கொணர்கிறது. கிறிஸ்துவ உலகையும் தாண்டி உலகில் பெரும் தாக்கத்தை உருவாக்கும் விழா இது என்று சொன்னால், மிகையல்ல. குழந்தை வடிவில் நம் இறைவன் வருவார் என்று எதிர்பார்த்துக் காத்திருக்கும் திருவருகைக் காலத்தின் முதல் ஞாயிறன்று, உலகின் முடிவில் இறைவன் மீண்டும் வருவதை நினைவுறுத்தும் நற்செய்தி நமக்குத் தரப்பட்டுள்ளது.
சென்ற ஆண்டு, அதாவது, 2012ம் ஆண்டு, டிசம்பர் மாதம் துவங்கியதும், உலக முடிவைப் பற்றிய பல செய்திகள் உலவி வந்தன. தென் அமெரிக்காவின் பழமைவாய்ந்த மாயன் கலாச்சார நாள்காட்டியின்படி, 21-12-2012 என்ற எண்ணிக்கை கொண்ட நாளன்று, அதாவது, 2012ம் ஆண்டு டிசம்பர் மாதம் 21ம் தேதி உலகம் முடியும் என்று சொல்லப்பட்டிருந்ததாக வதந்திகள் உலவியதால், இந்தப் பரபரப்பு உருவானது. உலக முடிவுக்கென குறிக்கப்பட்ட அந்த நாளைத் தாண்டி, இவ்வுலகம் மற்றுமோர் ஆண்டை முடித்துவிட்டது. இன்னும் உலகம் இயங்கிக் கொண்டுதான் இருக்கிறது.
உலக முடிவைப் பற்றி நம்மால் தீர்மானமாக ஒன்றும் சொல்ல முடியாது. அது நாளையே வரலாம், அல்லது இன்னும் பல கோடி ஆண்டுகள் சென்று வரலாம். ஆனால், நம் ஒவ்வொருவரின் தனிப்பட்ட உலக வாழ்வு முடியும் என்பது திண்ணமான உண்மை. இந்த முடிவும் எப்போது வரும் என்பது நிச்சயமற்ற ஒன்று. யாருக்கும் தெரியாத வகையில் முடிவு வரும் என்பதை இன்றைய நற்செய்தி தெளிவாகக் கூறியுள்ளது.
மத்தேயு நற்செய்தி 24: 40-42
இருவர் வயலில் இருப்பர். ஒருவர் எடுத்துக் கொள்ளப்படுவார்; மற்றவர் விட்டு விடப்படுவார். இருவர் திரிகையில் மாவரைத்துக்கொண்டிருப்பர். ஒருவர் எடுத்துக் கொள்ளப்படுவார்; மற்றவர் விட்டுவிடப்படுவார். விழிப்பாயிருங்கள்; ஏனெனில் உங்கள் ஆண்டவர் எந்த நாளில் வருவார் என உங்களுக்குத் தெரியாது.
உலகின் முடிவு அல்லது நமது வாழ்வின் முடிவு என்பதைக் குறித்த நம் கண்ணோட்டம் என்ன என்பதைச் சிந்திப்பது நல்லது. எல்லாம் முடிந்துவிடும், எல்லாம் அழிந்துவிடும் என்ற கோணத்தில் சிந்தித்தால், மனதில் வெறுமை உணர்வுகள் மேலோங்கும், வாழ்வதற்குப் பொருளே இல்லையா என்ற கேள்விகள் எழும்.
உலக முடிவில் அல்லது வாழ்வின் முடிவில் நாம் இறைவனைச் சந்திக்கச் செல்கிறோம் என்ற எண்ணமும், நமக்குள் வெவ்வேறு உணர்வுகளை எழுப்பலாம். நாம் சந்திக்கச் செல்வது நமது அன்புத் தந்தையை, தாயை, அல்லது உற்ற நண்பரை என்ற கண்ணோட்டம் இருந்தால், இச்சந்திப்பை ஆவலுடன் எதிர்பார்ப்போம். நாம் சந்திக்கப் போவது நம்மைத் தீர்ப்பிடவிருக்கும் ஒரு நீதிபதியை என்ற கண்ணோட்டம் இருந்தால், இச்சந்திப்பு பயத்தையும், கலக்கத்தையும் உருவாக்கும்.
ஒருவரைச் சந்திக்கச் செல்லும் நேரங்களில், நாம் நடந்துகொள்ளும் விதம் வித்தியாசமாக இருக்கும். அதுவும் நாம் சந்திக்கச் செல்வது மிக முக்கியமான ஒருவர் என்றால், மிகவும் கவனமாக நடந்து கொள்வோம். கைக்குழந்தைகளிடமும், மிகவும் வயதானவர்களிடமும் இந்த மாற்றங்கள் இருக்காது. அதேபோல், ஆன்மீகத்தில் மிகவும் ஆழ்ந்து தெளிந்தவர்களிடமும் இந்த மாறுதல்கள் இருக்காது. யார் பார்த்தாலும், பார்க்காமல் போனாலும் சரி. அவர்கள் எந்த நேரத்திலும் ஒரே விதமான, உண்மையான ஈடுபாட்டுடன் ஒவ்வொரு நாள் செயல்களையும் செய்வர். நேரத்திற்குத் தக்கதுபோல், தன்னைச் சூழ்ந்திருப்போருக்குத் தகுந்ததுபோல் வாழ்வை மாற்றாமல் வாழ்ந்த பல உயர்ந்த மனிதர்களின் வாழ்க்கை நமக்குப் பாடமாக வேண்டும்.
நகைச்சுவை உணர்வுடன் எப்போதும் வாழ்ந்ததாகச் சொல்லப்படும் புனித பிலிப் நேரி அவர்கள் வாழ்வில் நடந்த ஒரு சம்பவம் இது. புனித பிலிப் நேரி ஒருநாள் நண்பர்களுடன் சீட்டு விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது சாவைப் பற்றிய பேச்சு அங்கு எழுந்தது. நண்பர்களில் ஒருவர் பிலிப்பிடம், "பிலிப், இதோ, அடுத்த நிமிடமே நீ இறக்கப் போகிறாய் என்று தெரிந்தால், என்ன செய்வாய்?" என்று கேட்டார். பிலிப் ஒரு நிமிடம் சிந்தித்தார். பின்னர் அவரிடம், "தொடர்ந்து சீட்டு விளையாடிக் கொண்டிருப்பேன்." என்றார்.
மரணத்தை, பயங்கரமான ஒரு மாற்றமாக, முடிவாகப் பார்ப்பவர்கள் அதைக் கண்டு பயப்படலாம். காரணம்? அவர்களது வாழ்வுக்கும், சாவுக்கும் இடையே ஏகப்பட்ட முரண்பாடுகள் இருக்கலாம். இந்த முரண்பாடுகளை எல்லாம் சரிசெய்துவிட்டு, மரணத்தைச் சந்திக்க அவர்களுக்கு அதிக நேரம் தேவைப்படுகிறது. ஆனால், வாழ்வு முழுவதையும் நல்ல விதமாக பொறுப்புணர்வுடன் வாழ்பவர்களுக்கு, வாழ்ந்தவர்களுக்கு சாவு எவ்வகையிலும் பயத்தை உண்டாக்காது என்பதற்கு, புனித பிலிப் நேரி அவர்கள், நல்லதோர் எடுத்துக்காட்டு.
சாவின் வழியாக, தன்னைச் சந்திக்கப்போவது அல்லது தான் சென்றடையப்போவது இறைவன் தான் என்பதை ஆழமாக உணர்ந்தபின், பயம், பரபரப்பு எல்லாம் ஏன்? தேவையில்லையே. பிலிப் நேரியைப் பொறுத்தவரை நான் இப்படியும் கற்பனை செய்து பார்க்கிறேன். அந்த நண்பர் சொன்னது போலவே, சீட்டு விளையாடிக் கொண்டிருக்கும் போது அவருக்கு சாவு நேரிட்டால், மறு வாழ்வில் அந்த இறைவனோடு தன் விளையாட்டைத் தொடர்ந்திருப்பார் பிலிப். வாழ்க்கையில் இறைவனை அடிக்கடி சந்தித்து வந்த பிலிப்புக்கு பயம் பரபரப்பு எதற்கு? இந்த நிலை எல்லாருக்கும் கிடைக்கும் ஒரு பாக்கியம் அல்ல.
ஜான் வெஸ்லி என்பவர் 18ம் நூற்றாண்டில் வாழ்ந்த ஒரு மேதை. கிறிஸ்தவ வாழ்வு என்பது, பொறுப்புடன் சரியானக் கணக்கை இறைவனிடம் ஒப்படைக்கும் வாழ்வு என்ற எண்ணத்தை இங்கிலாந்து மக்கள் மத்தியில் விதைத்தவர் இவர். “இன்று உங்கள் வாழ்வின் கடைசி நாள் என்றால் நீங்கள் என்ன செய்வீர்கள்?” என்று இவரிடம் ஒருவர் கேட்டபோது, இவர் சொன்ன பதில் இதுதான்: "நான் மாலை நான்கு மணிக்கு வழக்கம்போல் தேநீர் அருந்துவேன், 6 மணிக்கு நோயுற்றிருக்கும் திருமதி பிரவுன் அவர்களை மருத்துவமனையில் பார்க்கச் செல்வேன், 8 மணிக்கு என் மாலை செபங்களைச் சொல்வேன், இரவு உணவுக்குப் பின், வழக்கம்போல் படுக்கச் செல்வேன்... விழித்தெழும்போது என் இறைவன் முகத்தில் விழிப்பேன்." என்று சொன்னாராம்.
புனித பிலிப் நேரியைப் போல, ஜான் வெஸ்லி அவர்களைப் போல மனதில் எவ்வித அச்சமுமின்றி, அமைதியாக மரணத்தைச் சந்திக்கும் பக்குவம் ஒரு நாளில் உருவாகும் மனநிலை அல்ல. வாழ்நாளெல்லாம் ஒருவர் பழக்கப்படுத்தும் மனநிலை. இத்தகைய நிலையை அடைந்தவர்கள், தங்கள் தனிப்பட்ட வாழ்விலும், சமுதாய வாழ்விலும் ஆழ்ந்த அமைதியை உணர்ந்தவர்கள். இத்தகைய அமைதியை தங்கள் உயிர் மூச்சாகக் கொண்டு வாழ்பவர்கள் இவ்வுலகில் பெருகினால், கிறிஸ்மஸ் விழாவின் உயிர்நாடியான செய்தி வாழ்நாளெல்லாம், உலகெங்கும் ஒலிக்கும். இதோ, கிறிஸ்மஸ் விழாவின் மையக் கருத்தாக வானதூதர் அறிவித்த செய்தி:
லூக்கா 2: 10-14
வானதூதர் இடையர்களிடம், “அஞ்சாதீர்கள், இதோ, எல்லா மக்களுக்கும் பெரும் மகிழ்ச்சியூட்டும் நற்செய்தியை உங்களுக்கு அறிவிக்கிறேன். இன்று ஆண்டவராகிய மெசியா என்னும் மீட்பர் உங்களுக்காகத் தாவீதின் ஊரில் பிறந்திருக்கிறார்” என்றார். உடனே விண்ணகத் தூதர் பேரணி அந்தத் தூதருடன் சேர்ந்து, “உன்னதத்தில் கடவுளுக்கு மாட்சி உரித்தாகுக! உலகில் அவருக்கு உகந்தோருக்கு அமைதி உண்டாகுக!” என்று கடவுளைப் புகழ்ந்தது.
அமைதி நிறைந்த உலகை ஒரு கனவாக, கற்பனையாகக் கண்டவர் இறைவாக்கினர் எசாயா. அவரது கற்பனை வரிகள் இந்த ஞாயிறன்று நமது முதல் வாசகமாக ஒலிக்கிறது. இறைவாக்கினர் எசாயா கண்ட கனவு, நம் உள்ளத்திலும் நம்பிக்கையை உருவாக்கட்டும்.
எசாயா 2 : 4-5
அவர்கள் தங்கள் வாள்களைக் கலப்பைக் கொழுக்களாகவும் தங்கள் ஈட்டிகளைக் கருக்கரிவாள்களாகவும் அடித்துக் கொள்வார்கள், ஓர் இனத்திற்கு எதிராக மற்றோர் இனம் வாள் எடுக்காது: அவர்கள் இனி ஒருபோதும் போர்ப்பயிற்சி பெறமாட்டார்கள். யாக்கோபின் குடும்பத்தாரே, வாருங்கள் நாம் ஆண்டவரின் ஒளியில் நடப்போம்.
வாள்கள் கலப்பை கொழுக்களாக மாறும்.
ஈட்டிகள் அறுவடை செய்யும் அரிவாள்கள் ஆகும்.
உயிர்களை அறுவடை செய்யும் படை வீரர்கள் பயிர்களை அறுவடை செய்யும் அற்புதமானப் பணியில் ஈடுபடுவார்கள்.
போர் பயிற்சிகளுக்குப் பதிலாக, ஏர் பிடித்து உழுகின்ற பயிற்சிகள் நடைபெறும்.
என்று இறைவாக்கினர் சொல்லும் வார்த்தைகள் கற்பனைகளாக, கனவுகளாக மட்டுமே இருக்கமுடியும். நனவாக மாறவே முடியாது என்று நம்மில் பலர் தீர்மானித்து விட்டோம். எனவே, இப்படி ஒரு காட்சியை நினைத்துப் பார்த்து, ஏக்கப் பெருமூச்சு விடலாம், அல்லது ஒரு விரக்தி சிரிப்பு சிரிக்கலாம். நமது ஏக்கத்திற்கும், விரக்திக்கும் காரணம் உள்ளது. எசாயாவின் கனவில் போர் கருவிகள் விவசாயக் கருவிகளாக மாறுகின்றன. நாம் வாழும் சூழலில் விவசாயக் கருவிகள் போர் கருவிகளாக மாறி வருகின்றன. பயிர்களை அறுவடை செய்யும் அரிவாள் உயிர்களை அறுவடை செய்யும் கொடூரம் நடந்து வருகிறது.
மனிதர்கள் கண்டுபிடித்த அனைத்துக் கருவிகளையும் கொண்டு ஆக்கவும் முடியும், அழிக்கவும் முடியும். அழிவை மட்டுமே முன்னிறுத்தும் செயல்கள் பெருகி வருவதைப் பார்க்கும்போது, கலிகாலம், முடிவுகாலம் ஆரம்பித்து விட்டதோ என்றும் பலமுறை குமுறுகிறோம்.
முடிவு என்றாலே, அழிவுதானா? இல்லை. முடிவு, இறுதி என்பனவற்றை அழிவு என்று பார்க்கலாம், அல்லது நிறைவு என்ற கோணத்திலும் சிந்திக்கலாம். அது நம் கண்ணோட்டத்தைப் பொறுத்தது. தகுந்த கண்ணோட்டம் நமது எண்ணங்களை மட்டுமல்ல, நமது செயல்களையும் மாற்றும் சக்திபெற்றது. இரண்டாம் உலகப் போரின் போது நிறுவப்பட்ட நாத்சி வதை முகாம்களைப் பற்றி ஆயிரமாயிரம் கதைகள், திரைப்படங்கள் உள்ளன. Jacob the Liar, அதாவது, ‘பொய்சொல்லும் ஜேக்கப்’ என்ற திரைப்படம், தனி ஒருவரின் மாறுபட்ட கண்ணோட்டம் எப்படி அவரைச் சுற்றியிருப்பவர்களையும் மாற்றுகிறது என்பதைக் காட்டும் ஓர் அழகிய திரைப்படம்.
யூத இனத்தைச் சார்ந்த ஜேக்கப் என்ற ஒரு கடைக்காரர் ஜெர்மானியர்களால் பிடிபட்டு நாத்சி வதை முகாமில் சேர்க்கப்படுகிறார். அவர் அந்த முகாமில் சேரும்போது, அங்கு, பலர் தற்கொலை செய்துகொண்டனர் என்பதை அறிகிறார். அவர், விளையாட்டாக ஒரு நாள் ரேடியோவில் தான் கேட்டதாக ஒரு செய்தியைக் கூறுகிறார். அதாவது, இன்னும் சில நாட்களில் ஜெர்மானியப் படைகள் தோற்கடிக்கப்படும் என்ற செய்தி அது. அந்த ரேடியோ எங்கு உள்ளதெனக் கேட்கும் எல்லோரிடமும் அது ஒரு பெரிய இரகசியம் என்று மட்டும் கூறுகிறார். ஜேக்கப் கூறும் செய்திகள் பலருக்கு நம்பிக்கை தருவதால் அவர் இருந்த முகாமில் தற்கொலைகள் நின்று போகின்றன. ஜெர்மானிய அதிகாரிகள் இந்த ரேடியோ பற்றி கேள்விப்பட்டு, ஜேக்கப்பைப் பிடித்து சென்று சித்ரவதை செய்கின்றனர். இறுதியில் ஜேக்கப் கொல்லப்படுகிறார். ஆனால், அவர் கற்பனையில் உருவாக்கிய அந்த ரேடியோ, அதன் வழியாகச் சொன்ன நம்பிக்கை தரும் செய்திகள் பலரையும் சாவிலிருந்து காப்பாற்றுகிறது.
சென்ற ஞாயிறன்று நம்பிக்கை ஆண்டை அதிகாரப் பூர்வமாக நிறைவு செய்தோம். ஆனால், நம் ஒவ்வொருவர் வாழ்விலும் நம்பிக்கை இன்னும் தொடரவேண்டும், இவ்வுலகமே நம்பிக்கையால் நிறைந்து வழியவேண்டும், நம்பிக்கையே நாம் சுவாசிக்கும் மூச்சாக மாறவேண்டும் என்ற செபங்கள் இத்திருவருகைக் காலம் முழுவதும் நம்மிடமிருந்து எழட்டும்.







All the contents on this site are copyrighted ©.