நவ.30,2013. இரத்த புற்றுநோய் மற்றும் பல்வேறு புற்றுநோய்களால் பாதிக்கப்பட்ட போலந்து
நாட்டின் Wroclaw நகர்ச் சிறாரை இச்சனிக்கிழமையன்று வத்திக்கானில் சந்தித்தார் திருத்தந்தை
பிரான்சிஸ். உங்களின் தாங்க முடியாத வேதனைகளை இறைவன் அறிகிறார், உங்களின் செபங்கள்
மற்றும் வேதனைகளால் நீங்கள் திருஅவைக்கு நிரம்பச் செய்ய முடியும் என இச்சிறாரிடம் உரைத்த
திருத்தந்தை பிரான்சிஸ், அவர்கள் ஒவ்வொருவரையும் முத்தமிட்டு வாழ்த்தி ஆசீர்வதித்தார். இச்சிறார்
இங்கு வந்ததற்காகவும், திருஅவைக்காக அவர்கள் செபிப்பதற்காகவும் நன்றியும் தெரிவித்தார்
திருத்தந்தை. மேலும், நாம் ஒவ்வொருவரும், வானகத்தந்தையின் கனிவு மற்றும் மன்னிப்பைத்
தழுவிக்கொள்ளுமாறு திருஅவை அழைக்கிறது என இச்சனிக்கிழமையன்று, தனது டுவிட்டர் பக்கத்தில்
எழுதியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ். இன்னும், உரோம் பல்கலைக்கழக மாணவர்களுடன் மாலை
திருவழிபாடு நடத்துவது திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் இச்சனிக்கிழமை நிகழ்ச்சித் திட்டத்தில்
உள்ளது. வத்திக்கான் புனித பேதுரு பசிலிக்கா பேராலயத்தில் இம்மாலை வழிபாடு நடைபெறுகின்றது.