நவ.29,2013. நிலவில் மனிதர் வாழ்ந்து வேலை செய்ய இயலுமா என்பதை அறிந்துகொள்வதற்காக, நிலவில்
2015ம் ஆண்டுக்குள் தாவரங்களை வளரச் செய்யும் ஆராய்ச்சியில் ஈடுபட உள்ளது அமெரிக்க ஐக்கிய
நாட்டு நாசா விண்வெளி ஆய்வு மையம். இதற்கான பணிகள் தற்போதே தொடங்கப்பட்டுவிட்டது,
தற்போது எந்த வகை பயிர்களை முளைக்க வைப்பது என்பது குறித்து ஆராய்ச்சிகள் நடந்த வண்ணம்
உள்ளன. இதில், டர்னிப் எனப்படும் சீனம் முள்ளங்கி, துளசி, ஓமம் மற்றும் அராபி டாப்சிஸ்
என்ற ஒருவகை தாவரத்தைப் பயிரிட முடியும் எனக் கண்டறியப்பட்டுள்ளது. இவற்றின் விதைகள்
5 முதல் 10 நாட்களில் முளைக்கும் தன்மை உடையவை. இதற்காக 2015ம் ஆண்டில் ஆய்வுக் கூடம்
ஒன்றும் அனுப்பப்படுகிறது. இந்த விதைகளை முளைக்க வைத்து காய்கறி விளைவிப்பதன் மூலம்
அங்கு மனிதர் தங்கி உயர் வாழ முடியுமா என்ற ஆய்வையும் தொடர்ந்து நடத்த நாசா திட்டமிட்டுள்ளது. நிலவு
அல்லது செவ்வாய்க் கிரகத்தில் காய்கறிகளைப் பயிரிடும் திட்டத்தை, கடந்த ஆண்டில் சீன அறிவியலாளர்கள்
அறிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.