கர்நாடக ஆயர்: கத்தோலிக்கர், நம்பிக்கை ஆண்டின் சாட்சிகளாக வாழ்கின்றனர்
நவ.26,2013. விசுவாசத்தின் சாட்சிகளாய் வாழ்தல், இயேசு கிறிஸ்துவின் அடிச்சுவடுகளைப்
பின்செல்லுதல், அன்றாட வாழ்வில் நற்செய்தி அறிவித்தல் ஆகிய மூன்று பாடங்களை, இந்த நம்பிக்கை
ஆண்டில் தனது மறைமாவட்ட விசுவாசிகள் கற்றுக்கொண்டுள்ளனர் என்று இந்திய ஆயர் ஒருவர் கூறினார். மங்களூரில்
மூன்று நாள்கள் நடைபெற்ற நம்பிக்கை ஆண்டு நிறைவு விழா குறித்து ஆசியச்செய்தி நிறுவனத்திடம்
பேசிய கர்நாடக மாநிலத்தின் மங்களூர் ஆயர் அலாய்சியஸ் பால் டி சூசா, இவ்விழாவில் இம்மறைமாவட்டத்தின்
ஒவ்வொரு பகுதியிலிருந்தும் அனைத்து வயது விசுவாசிகளும் கலந்து கொண்டனர் எனத் தெரிவித்தார். கத்தோலிக்கர்
தங்கள் விசுவாசத்தை அன்றாட வாழ்வில் நடைமுறைப்படுத்தவிருப்பதை அறிவித்த விதம், திருஅவையின்
மறைக்கல்வியையும் போதனைகளையும் கற்றுக்கொள்வதற்கு அவர்கள் காட்டிய ஆர்வம் ஆகிய அனைத்தும்
நம்பிக்கை ஆண்டின் கொடையாக இருந்ததாகவும் மங்களூர் ஆயர் கூறினார். 2008ம் ஆண்டு செப்டம்பரில்
கர்நாடகாவில் 24 ஆலயங்கள் தாக்கப்பட்டன. இவற்றில் பெரும்பாலானவை மங்களூர் மறைமாவட்டத்துக்குச்
சொந்தமானவை.