திருத்தந்தை பிரான்சிஸ் : ஒப்புரவு, திருநற்கருணை திருவருள்சாதனங்கள் நம் வாழ்வுக்கு
மிகவும் முக்கியமானவை
நவ.23,2013. திருவருள்சாதனங்கள், நம்மில் இயேசு கிறிஸ்துவின் பிரசன்னமாக விளங்குகின்றன;
எனவே, நாம் ஒப்புரவு திருவருள்சாதனத்தைப் பெறுவதற்குச் செல்வதும், திருநற்கருணை வாங்குவதும்
முக்கியம் என, இச்சனிக்கிழமை தன் டுவிட்டர் பக்கத்தில் எழுதியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ். மேலும்,
திரிதெந்தின் பொதுச்சங்கம் நிறைவடைந்ததன் 450ம் ஆண்டு விழாவில் கலந்து கொள்வதற்கென தனது
பிரதிநிதியாக, கர்தினால் Walter BRANDMÜLLERஐ நியமித்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ். இந்த
450ம் ஆண்டு நிறைவு விழா, இத்தாலியின் Trento பேராலயத்தில் வருகிற டிசம்பர் முதல் தேதியன்று
நடைபெறும். மேலும், கத்தோலிக்கத் திருஅவையில் திருமுழுக்குப் பெற்று புதிதாக இணையவிருக்கும்
ஏறக்குறைய 500 பேரை இச்சனிக்கிழமை மாலை 4.30 மணிக்கு வத்திக்கான் தூய பேதுரு பசிலிக்கா
பேராலயத்தில் சந்திப்பது திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் இந்நாளைய நிகழ்வுகளில் ஒன்றாகும்.
இவர்கள் 20க்கும் 40 வயதுக்கும் உட்பட்டவர்கள். இரஷ்யா, மோல்தேவியா, எகிப்து, அல்ஜீரியா,
போஸ்னிய-எர்செகொவினா, மொராக்கோ, சீனா, மங்கோலியா என 47 நாடுகளைச் சேர்ந்தவர்கள்.