இலங்கையில் நம்பிக்கை ஆண்டுக்குப் பின்னர் மரியா ஆண்டு
நவ.22,2013. முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களால் அறிவிக்கப்பட்ட நம்பிக்கை
ஆண்டு இம்மாதம் 24ம் தேதி நிறைவடையும்வேளை, இம்மாதம் 30ம் தேதி மரியா ஆண்டு தொடங்கும்
என, கொழும்பு பேராயர் கர்தினால் மால்கம் இரஞ்சித் அவர்கள் தனது உயர்மறைமாவட்ட விசுவாசிகளுக்கு
அறிவித்துள்ளார். மரியா ஆண்டு தொடங்குவது குறித்து மேயப்புப்பணி அறிக்கை வெளியிட்டுள்ள
கர்தினால் இரஞ்சித், நம் விசுவாசத்தை எப்படி வாழ்வது என்பதற்கு அன்னை மரியா சிறந்த எடுத்துக்காட்டாய்
இருக்கிறார் என்றும், மரியா ஆண்டு, நம்பிக்கை ஆண்டின் இயல்பான தொடர்ச்சி என்றும் சொல்லியுள்ளார். இந்த
மரியா ஆண்டின் ஒரு கட்டமாக, வருகிற ஆண்டு மே 14 முதல் 17 வரை இடம்பெறும் மடு திருத்தலத்
திருப்பயணத்தில் இலங்கை கத்தோலிக்கர் அனைவரும் கலந்து கொள்ளுமாறும் வலியுறுத்தியுள்ளார்
கர்தினால் இரஞ்சித். தனியாட்கள் மற்றும் குடும்பங்கள் மத்தியில் செபம், சிறப்பாக,
செபமாலை பக்தி முயற்சி மற்றும் மனிதர்மீது இறைவன் கொண்டுள்ள அன்பின் மறையுண்மை குறித்த
விழிப்புணர்வை ஏற்படுத்துவதே மரியா ஆண்டின் நோக்கம் எனவும் கர்தினால் இரஞ்சித் தனது அறிக்கையில்
விளக்கியுள்ளார்.