மக்களவை ஆன்மீக வழிகாட்டிகளுக்கென வத்திக்கானில் முதல் அனைத்துலகக் கூட்டம்
நவ.15,2013. நாடுகளின் மக்களவைகளில் ஆன்மீக வழிகாட்டிகளாகப் பணியாற்றும் அருள்பணியாளர்க்கான
முதல் அனைத்துலகக் கூட்டம் வத்திக்கானில் இவ்வியாழனன்று தொடங்கியுள்ளது. விசுவாசமும்
அரசியலும் என்ற தலைப்பில், திருப்பீட நீதி மற்றும் அமைதி அவையால் நடத்தப்படும் இக்கூட்டத்தில்
தொடக்கவுரையாற்றிய, அவ்வவையின் தலைவர் கர்தினால் பீட்டர் டர்க்சன், கிறிஸ்தவ விசுவாசத்துக்கும்
அரசியலில் தீர்மானம் எடுப்பதற்கும் இடையே சரியான தொடர்பைத் தேடுபவர்கள் எதிர்கொள்ளும்
புதிய மற்றும் கடுமையான விவகாரங்கள் குறித்து கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார். கிறிஸ்தவ
அரசியல்வாதிகள் பொதுநலனுக்காக உழைப்பதற்குத் தூண்டுவதும், அவர்களின் பணியில் நம்பிக்கையையும்
உற்சாகத்தையும் ஏற்படுத்துவதும் ஆன்மீக வழிகாட்டிகளின் பணி என்பதையும் கர்தினால் டர்க்சன்
சுட்டிக்காட்டினார். முத்திப்பேறுபெற்ற 2ம் ஜான் பால், 2000மாம் ஆண்டில் புனித தாமஸ்மூரை,
அரசியல்வாதிகளின் பாதுகாவலராக அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.