இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கம் பற்றிய CCI கூட்டத்தில் கர்தினால் கிரேசியஸ்
நவ.15,2013. இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கம் ஏற்படுத்தியுள்ள தாக்கங்கள் பற்றி கலந்துரையாடுவற்கென
இவ்வியாழனன்று தொடங்கிய CCI என்ற இந்திய கத்தோலிக்க அவையின் 12வது பொதுக்குழுக் கூட்டத்தில்
தொடக்கவுரையாற்றினார் இந்திய ஆயர் பேரவைத் தலைவர் கர்தினால் ஆஸ்வால்டு கிரேசியஸ். உத்தர
பிரதேச மாநிலத்தின் வாரனாசி நவ சாதனா மேய்ப்புப்பணி மையத்தில் தொடங்கியுள்ள இந்த மூன்று
நாள்கள் கூட்டத்தில், இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கத்தின் தாக்கங்கள், இந்தியத் திருஅவையில்
ஏற்படுத்தியுள்ள புதுப்பித்தல் குறித்து விவாதிக்கப்பட்டு வருகிறது. ஏழைகள் மீதான
திருஅவையின் அக்கறை, பொதுநிலையினரின் பங்கு, இந்தியச் சூழலில் பிற சமயத்தவரோடு உரையாடல்
போன்ற தலைப்புகளும் இக்கூட்டத்தில் பேசப்பட்டு வருகின்றன. CCI என்ற இந்திய கத்தோலிக்க
அவை, இந்திய திருஅவையின் மேய்ப்புப்பணி அவையாகும். இதில் ஆயர்கள், அருள்பணியாளர்கள்,
அருள்சகோதரிகள் மற்றும் பொதுநிலையினர் உறுப்பினர்களாக உள்ளனர்.