நவ.11,2013. கர்தினால் Domenico Bartolucciயின் மரணத்தை முன்னிட்டு தன் ஆழ்ந்த அனுதாபங்களை
வெளியிடும் இரங்கற்தந்தியை கர்தினாலின் குடும்ப உறுப்பினர்களுக்கு அனுப்பியுள்ளார் திருத்தந்தை
பிரான்சிஸ். திருஅவையில் இசையின்மீது மிகுந்த ஆர்வம் கொண்டு, வத்திக்கானின் சிஸ்டைன்
இசைக்குழுவின் இயக்குனராகவும் சிறந்த சேவையாற்றியுள்ள கர்தினாலின் பணிகளை தன் இரங்கற்தந்தியில்
பாராட்டியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ், கர்தினால் Bartolucciயின் பிரிவால் துயருறும்
அனைவருக்கும் தன் ஆறுதலையும் செப உறுதிப்பாட்டையும் வழங்குவதாகத் தெரிவித்துள்ளார். இத்தாலியின்
ஃபுளோரன்ஸ் நகருக்கு அருகே 1917ம் ஆண்டு பிறந்த கர்தினால் Bartolucci, 2010ம் ஆண்டு நவம்பர்
மாதம் திருத்தந்தை 16ம் பெனடிக்டால் கர்தினாலாக உயர்த்தப்பட்டார். 96 வயதில் இத்திங்கள்
காலை உயிரிழந்த கர்தினால் Bartolucciயின் அடக்கத் திருப்பலி இப்புதனன்று பிற்பகலில் வத்திக்கான்
தூய பேதுரு பசிலிக்கா பேராலயத்தில் இடம்பெறும். கர்தினால் Bartolucciயின் மரணத்துடன்
திருஅவையில் கர்தினால்களின் எண்ணிக்கை 200 ஆகக் குறைந்துள்ளது. இதில் 109 பேரே திருத்தந்தையைத்
தேர்ந்தெடுக்கும் தகுதியுடையவர்கள், அதாவது 80 வயதிற்குட்பட்டவர்கள்.