இந்தியப் பிரதமர் காமன்வெல்த் மாநாட்டில் கலந்து கொள்ள வேண்டும், மன்னார் ஆயர்
நவ.09,2013. இம்மாதம் 15 முதல் 17 வரை இலங்கையின் கொழும்பில் நடைபெறவுள்ள காமன்வெல்த்
நாடுகளின் தலைவர்கள் உச்சி மாநாட்டில் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் கலந்து கொள்ள வேண்டும்
என்று மன்னார் மறைமாவட்டத்தின் ஆயர் இராயப்பு ஜோசப் அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இந்தியப் பிரதமர் அவ்வாறு இலங்கை வரும்போது மன்னார் உட்பட வடமாநிலத்திற்கு வருகை
தர தவறக்கூடாது என்றும் ஆயர் இராயப்பு ஜோசப் வலியுறுத்தியுள்ளார். இந்தியாவே இந்தப்
போரை ஊக்குவித்திருக்கின்ற காரணத்தினால் அதனால் ஏற்பட்ட விளைவுகளை இந்தியப் பிரதமர் இங்கு
வந்து பார்ப்பது பொருத்தமாக இருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார். பிரதமர் மன்மோகன்
சிங் வடமாநிலத்திற்கு வந்து அங்குள்ள தமிழர்களைச் சந்தித்து உரையாடினால் போரினால் ஏற்பட்டுள்ள
பின்விளைவுகளை அவரால் நன்கு தெரிந்து கொள்ளமுடியும் என்றும் ஆயர் இராயப்பு ஜோசப் மேலும்
தெரிவித்துள்ளார். இந்தியா, தமிழர்களின் தாயின் நிலையில் இருப்பதனால் இந்தியா விழித்தெழுந்து
தமிழ் மக்கள் படும் வேதனையைத் தீர்த்து வைக்க வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.