நவ.08,2013. இவ்வெள்ளியன்று ஹையான் என்ற இராட்சதப் புயல் பிலிப்பீன்சின் மத்திய பகுதியை
மணிக்கு 235 கிலோ மீட்டர் வேகத்தில் தாக்கியுள்ளதில் அந்நாட்டின் 20 மாநிலங்களிலுள்ள
ஒரு கோடியே 20 இலட்சத்துக்கு மேற்பட்ட மக்களுக்குக் குடியிருப்புகள் தேவைப்படுகின்றன
என்று ஊடகங்கள் கூறுகின்றன. இதுவரை, காலத்தில் இல்லாத அளவுக்கு பெரியதான புயலொன்று
பிலிப்பீன்ஸ் தீவுகளின் மையப்பகுதிகளைத் தாக்கியுள்ளது. வீடுகளின் கூரைகள் தூக்கி
வீசப்பட்டதுடன், தெருக்களில் உள்ள மின்கம்பங்களும், மரங்களும் முறிந்து விழுந்துள்ளன. சமர்
மற்றும் லெய்ட்டி தீவுகளை முதலில் மணிக்கு 235 கிலோமீட்டர்களுக்கும் அதிகமான வேகத்தில்
தாக்கிய சூப்பர் தைப்பூன் ஹையான் என்னும் இந்தப் புயல், பல கடற்கரை கிராமங்களை நீரில்
மூழ்கடித்துவிட்டது. புயல் கடந்த வழியில் உள்ள பல இலட்சக்கணக்கான மக்கள் பாதுகாப்பான
இடங்களுக்கு அகற்றப்பட்டனர். பல இடங்களில் பெருத்த வெள்ளமும், மண்சரிவும் ஏற்பட்டுள்ளன.
உயிரிழப்புக்கள் மற்றும் பிற சேதங்கள் பற்றி கணக்கிட பல நாட்கள் ஆகலாம் என்று சொல்லப்படுகின்றது.