2013-11-07 16:13:08

அமெரிக்க ஆயர்கள் : பொதுநலனுக்கான அர்ப்பணத்துடன் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவேண்டும்


நவ.,07,2013. ஏழைகள் மற்றும் பசியால் வாடுவோருக்கு முதன்மை இடத்தை வழங்கும் வகையில் பொதுநலனுக்கான அர்ப்பணத்துடன் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவேண்டும் என அமெரிக்க ஐக்கிய நாட்டின் மக்கள் பிரதிநிதிகள் அவைக்கு அழைப்புவிடுத்துள்ளனர் அந்நாட்டுக் கத்தோலிக்க தலைவர்கள்.
பொருளாதார நெருக்கடிகள் இடம்பெற்றுவரும் இன்றையக் காலக்கட்டத்தில் பழமையான விவசாயக் கொள்கைகளைப் புறந்தள்ளி, மக்களுக்கு உதவும் புதிய கொள்கைகளை உருவாக்க வேண்டும் என அழைப்புவிடுத்துள்ள கத்தோலிக்கத் தலைவர்கள், விவசாயத்தில் ஈடுபட்டிருக்கும் ஏழைக் குடும்பங்களுக்கு உதவுவதாக புதிய சட்டங்கள் இருக்க வேண்டும் என விண்ணப்பித்துள்ளனர்.
மாற்றுத்திறனாளிகள், வேலைவாய்ப்பற்றோர், முதியோர், குழந்தைகள் ஆகியோரைப் பாதிக்கும் வகையிலான எந்தவோர் அமைப்புமுறை மாற்றங்களுக்கும் மக்கள் பிரதிநிதிகள் ஆதரவு வழங்கக்கூடாது எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளனர் அமெரிக்க ஐக்கிய நாட்டு திருஅவைத் தலைவர்கள்.

ஆதாரம் : CNS








All the contents on this site are copyrighted ©.