நவ.05,2013. சிரியாவின் தமாஸ்கு திருப்பீட தூதரகத்தில் இச்செவ்வாய் காலை பீரங்கித் தாக்குதல்
நடத்தப்பட்டுள்ளது என்றும், இந்த வன்முறை, அக்கட்டிடத்தின் மூன்றாவது மாடியில் வாழும்
திருப்பீட தூதரைக் குறிவைத்து நடத்தப்பட்டுள்ளது என்றும் தமாஸ்கு திருப்பீட தூதர் பேராயர்
மாரியோ செனாரி அவர்களின் செயலர் அருள்பணி ஜார்ஜோ கூறினார். இந்த வன்முறையில் உயிரிழப்புகள்
எதுவும் இடம்பெறவில்லையென்றும், அக்கட்டிடத்தின் மேற்கூரையின் ஒரு பகுதி அழிக்கப்பட்டுள்ளது
என்றும் அருள்பணி ஜார்ஜோ மேலும் கூறினார். இத்தாக்குதலையொட்டி திருப்பீட தூதரோ, திருப்பீட
தூதரகத்தின் பணியாளர்களோ, யாரும் அவ்விடத்தைவிட்டுச் செல்லமாட்டார்கள் என்றும் அக்குரு
தெரிவித்தார். சிரியாவில் கடந்த இரண்டு வருடங்களாக இடம்பெற்றுவரும் சண்டையில் அந்நாட்டைவிட்டுச்
செல்லாதவர்களில் பேராயர் செனாரி அவர்களும் ஒருவர்.