அஜர்பைஜானுக்கு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் திருப்பயணம் மேற்கொள்ளுமாறு Caucasus
முஸ்லீம்கள் அழைப்பு
நவ.05,2013. அஜர்பைஜான் நாட்டின் Caucasus இசுலாமியத் துறைத் தலைவர் Sheikh Hadji Allahchukur
Pachazade அவர்கள், தங்கள் நாட்டுக்கு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் திருப்பயணம் மேற்கொள்ளுமாறு
அழைப்புவிடுத்துள்ளார். வத்திக்கான் அருங்காட்சியகத்தில் அஜர்பைஜான் நாட்டுக் கலைகளை
வைப்பது தொடர்பாக அந்நாட்டுக்கு அதிகார்ப்பூர்வச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள திருப்பீட
கலாச்சார அவைத் தலைவர் கர்தினால் Gianfranco Ravasi அவர்களிடம் இவ்வழைப்பை முன்வைத்தார்
Pachazade. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது குறித்து தாங்கள்
மகிழ்வதாகவும், அவரை நேரிடையாகச் சந்திப்பதற்கு ஆவலாக இருப்பதாகவும் Pachazade மேலும்
கூறினார். ஏறக்குறைய ஒரு கோடி மக்களைக் கொண்ட அஜர்பைஜான், ஒரு முஸ்லீம் நாடாகும்.
இந்நாட்டில் முஸ்லீம்கள் 93.4 விழுக்காடும், கிறிஸ்தவர்கள் 4.6 விழுக்காடும் உள்ளனர்.
இவர்களில் கத்தோலிக்கர் ஏறக்குறைய 400 பேரே. இவர்களும் பெரும்பாலும் வெளிநாட்டவரே.