திருத்தந்தை பிரான்சிஸ் : இயேசுவின் மீதான நம்பிக்கையில் நமது வாழ்வின் அந்திவேளையை நினைத்துப்
பார்ப்போம்
நவ.02,2013. நமது இதயத்தை இயேசுவின் மீதான நம்பிக்கையில் நிலைநிறுத்தி நமது வாழ்வின்
இறுதிநேரத்தை நினைத்துப் பார்ப்போம் என்று இவ்வெள்ளி மாலை கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
அனைத்துப் புனிதர்களின் பெருவிழாவாகிய இவ்வெள்ளிக்கிழமை மாலையில் உரோம் வெரானோ கல்லறைத்
தோட்டத்தில் திருப்பலி நிகழ்த்தி மறையுரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ், கதிரவன் மறையும்
இவ்வேளையில் நமது வருங்காலத்தைப் பற்றியும், நமக்குமுன் வாழ்ந்து இறந்து ஆண்டவரில் இளைப்பாறும்
அனைவரையும் நினைத்துப் பார்ப்பதற்கு இக்கல்லறைத் தோட்டத்தில் நாம் கூடியுள்ளோம் என்று
கூறினார். நம்பிக்கை, நிலைநிறுத்து, இயேசு ஆகிய மூன்று வார்த்தைகளை மையமாகக் கொண்டிருந்த
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் மறையுரை, நம் ஒவ்வொருவரின் இறுதிக்காலம், இறப்பு ஆகியவற்றில்
மேலோங்கவேண்டிய கிறிஸ்தவ நம்பிக்கை பற்றி விளக்குவதாக இருந்தது. அத்திருப்பலியில்
கலந்துகொண்ட பல்லாயிரக்கணக்கான மக்களுக்கென ஏற்கனவே தயார் செய்திருந்த மறையுரைத் தாளை
வைத்துவிட்டு, உருக்கமான தொனியில் மறையுரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ், இன்று நம்மைவிட்டுப்
பிரிந்து சென்ற நம் சகோதர சகோதரிகளை நினைத்துப் பார்க்கின்றோமென்றால், இவர்கள் நமது நம்பிக்கையும்,
நம்மை ஒருபோதும் ஏமாற்றாதவருமான கிறிஸ்துவின் குருதியால் சுத்தப்படுத்தப்பட்டவர்கள்
என்பதற்காகவே என்றும் கூறினார். இந்நாளைய திருப்பலி வாசகங்களை வைத்து மறையுரையாற்றிய
திருத்தந்தை, இறந்த அனைத்து ஆன்மாக்களையும் நினைவுகூரும் நாளுக்கு முன்னர் நாம் சிறப்பிக்கும்
அனைத்துப் புனிதர்களின் பெருவிழாவாகிய இந்நாளில் நம் வாழ்வோடு தொடர்ந்துவரும் நம்பிக்கை
குறித்து நினைத்துப் பார்க்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். நம்பிக்கை, இறைவனின்
வாழ்வில் நிலைநிறுத்தப்பட்டுள்ளதாக, ஆதிகாலக் கிறிஸ்தவர்கள் நம்பிக்கையை வெளிப்படுத்த,
நங்கூரத்தை அடையாளமாகப் பயன்படுத்தினர், நாமும் நமது வாழ்வை இயேசு கிறிஸ்துவில், இறைவனில்
நிலைநிறுத்த வேண்டும், நங்கூரமிடவேண்டும் என்றும் வலியுறுத்தினார் திருத்தந்தை பிரான்சிஸ். நம்பிக்கை,
தூய்மைப்படுத்துகின்றது, ஒளிர்விக்கின்றது, துரிதமாகச் செல்ல வைக்கின்றது என்றுரைத்த
திருத்தந்தை பிரான்சிஸ், கதிரவன் மறையும் இவ்வேளையில் நமது இறுதிநேரத்தைப் பற்றி நினைத்துப்
பார்ப்போம், நமது இதயம் எதில் நங்கூரமிடப்பட்டுள்ளது, அது இயேசுவில் நிலைநிறுத்தப்பட்டிருந்தால்
அவர் நம்மை ஒருபோதும் ஏமாற்றமாட்டார் என்று உரைத்தார். நல்வாழ்வைத் தேடி வேறு நாடுகளுக்குப்
பயணம் செய்யும்போது பாலைவனத்திலும், கடலிலும் இறப்பவர்களை இத்திருப்பலியில் சிறப்பாக
நினைவுகூர்ந்து செபிப்பதாகவும் மறையுரையின் இறுதியில் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.