உலகக் கிறிஸ்தவக் கழகத்தின் 10வது மாநாட்டிற்கு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வழங்கியுள்ள
செய்தி
அக்.30,2013. எங்கெல்லாம் வாழ்வு என்ற கொடை போற்றி வளர்க்கப்படுகிறதோ, எங்கெல்லாம் நீதியும்,
அமைதியும் நிலவ முயற்சிகள் எடுக்கப்படுகிறதோ, அங்கெல்லாம் இறையாட்சி நிலவுகிறது என்று
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறினார். அக்டோபர் 30, இப்புதனன்று, தென் கொரியாவின்
Busan நகரில், WCC எனப்படும் உலகக் கிறிஸ்தவக் கழகத்தின் 10வது மாநாட்டிற்கென, திருத்தந்தை
பிரான்சிஸ் அவர்கள் வழங்கியுள்ள செய்தியில் இவ்வாறு கூறியுள்ளார். "வாழ்வின் இறைவனே,
எங்களை நீதியிலும், அமைதியிலும் வழிநடத்தும்" என்ற மையக்கருத்துடன் நடைபெறும் இம்மாநாட்டில்,
மூவொரு இறைவனின் ஆசீர் முழுமையாக இறங்கிவர வேண்டுமென்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள்
வாழ்த்தியுள்ளார். அக்டோபர் 30ம் தேதி முதல் நவம்பர் 8ம் தேதி முடிய நடைபெறும் இம்மாநாட்டில்,
கிறிஸ்தவ ஒன்றிப்பு திருப்பீட அவையின் தலைவர் கர்தினால் Kurt Koch அவர்கள் கலந்துகொண்டு,
திருத்தந்தையின் செய்தியை வாசித்தார். கத்தோலிக்கத் திருஅவை, உலகக் கிறிஸ்தவ கழகத்தின்
முழு உறுப்பினராக இணையவில்லையெனினும், இக்கழகம் மேற்கொள்ளும் பல்வேறு முயற்சிகளில் பங்கேற்று
வருகிறது. ஆயர் Brian Farell அவர்கள் தலைமையில், WCC யின் 10வது மாநாட்டில், 25 உறுப்பினர்கள்
கத்தோலிக்கத் திருஅவையின் சார்பில் கலந்துகொள்கின்றனர்.