ஈராக் நாட்டின் சமயத் துறையைச் சார்ந்த அரசு அதிகாரிகளுடன் திருத்தந்தை சந்திப்பு
அக்.30,2013. ஒவ்வொருநாளும் வன்முறைகளால் காயப்பட்டு வரும் ஈராக் நாட்டிற்காகச் சிறப்பாகச்
செபிப்போம் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தன் புதன் பொது மறைபோதகத்தின் இறுதியில்
விண்ணப்பித்தார். பல்சமய உரையாடல் திருப்பீட அவையின் முயற்சியால், ஈராக் நாட்டின்
சமயத் துறையைச் சார்ந்த அரசு அதிகாரிகளுடனும், வேறு பல இஸ்லாமியத் தலைவர்களுடனும் அக்டோபர்
29, 30 ஆகிய இருநாட்கள், உரோம் நகரில் உரையாடல் கூட்டம் ஒன்று நடைபெற்றது. இத்திருப்பீட
அவையின் தலைவரான கர்தினால் Jean Louis Tauran அவர்கள் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில்
கலந்துகொண்ட உறுப்பினர்களை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் புதன் மறைபோதகத்திற்குப்
பிறகு சந்தித்து, தன் வாழ்த்துக்களைத் தெரிவித்தார். ஈராக் நாட்டிற்கும், திருப்பீடத்திற்கும்
இடையே சமய உரையாடல் முயற்சிகளை வலுப்படுத்தும் வழிகள் இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டன.