2013-10-26 16:41:57

முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்கள் திருஅவைக்கு வழங்கியுள்ள கொடைகளுக்கு, திருத்தந்தையின் நன்றி


அக்.,26,2013. முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்கள், 'நாசரேத்தூர் இயேசு’ என்ற தன் புத்தகங்கள் வழியாக திருஅவைக்கு வழங்கிய தனிச்சிறப்புமிக்கக் கொடையை நன்றியுடன் நினைவுகூர்வதாகத் தெரிவித்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.
முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களின் பெயரால் திருஅவையில் வழங்கப்படும் விருதை, இச்சனிக்கிழமையன்று பேராசிரியர் Christian Schaller அவர்களுக்கு வழங்கிய நிகழ்ச்சியில் உரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்கள் தன் மனச்சான்றில் ஒலித்த இறைவனின் குரலுக்கு எப்போதும் செவிசாய்த்தவராக இருந்தார் என்று புகழாரம் சூட்டினார்.
பல ஆண்டுகளாக தான் மேற்கொண்ட ஆய்வு, செபம், இறையியல் கருத்துமோதலகள் போன்றவை மூலம் பெறப்பட்ட எண்ணங்களை திருஅவைக்கும் அனைத்து மனிதர்களுக்கும், முன்னாள் திருத்தந்தை ஒரு கொடையாக வழங்கியுள்ளார் என்றார் திருத்தந்தை பிர்ரன்சிஸ்.
திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களின் புத்தகத்தை வாசித்தவர்கள் பலர் தங்கள் விசுவாசத்தை ஆழப்படுத்தியுள்ளனர் என்பதையும் தெரிவித்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இப்புத்தகங்கள் வழியாக, முதன்முறையாக நற்செய்தியின் மீது, குறிப்பாக இறையியல் மற்றும் வரலாற்றுக்கிடையே நிலவும் தொடர்பு குறித்த ஆர்வம் மக்கள் மத்தியில் எழுந்துள்ளதைக் காணமுடிகிறது எனவும் தெரிவித்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.