2013-10-19 16:23:02

விசுவாசத்தில் 100 மீட்டர் ஓட்டப் பந்தயம்


அக்.19,2013. விளையாட்டில் வெளிப்படும் கல்வி, கலாச்சார மற்றும் ஆன்மீக விழுமியங்களை ஊக்குவிக்கும் விதமாக, இஞ்ஞாயிறன்று வத்திக்கானில் 100 மீட்டர் ஓட்டப் பந்தயம் விளையாட்டை நடத்தவுள்ளது திருப்பீட கலாச்சார அவை.
கத்தோலிக்கத் திருஅவையில் கடைப்பிடிக்கப்பட்டுவரும் நம்பிக்கை ஆண்டின் ஒரு நிகழ்வாக நடத்தப்படவுள்ள இந்த விளையாட்டில் ஏறக்குறைய ஐந்தாயிரம் பேர் கலந்து கொள்வார்கள்.
காலை 8.30 மணிக்குத் தொடங்கும் இந்த 100 மீட்டர் ஓட்டப் பந்தயம், வத்திக்கான் பசிலிக்காவுக்கு எதிர்ப்புறத்தில் அமைந்துள்ள via della Conciliazione என்ற பெரிய சாலையில் தொடங்கி வத்திக்கான் தூய பேதுரு வளாகத்தில் முடிவடையும்.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் இஞ்ஞாயிறு நண்பகல் மூவேளை செபத்தோடு நிறைவடையும் இந்த 100 மீட்டர் ஓட்டப் பந்தய விளையாட்டு நிகழ்வில், உலகில் பல்வேறு விளையாட்டுக்களில் தேர்ந்தவர்களின் பகிர்வுகளும் இடம்பெறும்.
மேலும், திருப்பீட கலாச்சார அவை, ஆங்கிலம் பேசும் நாடுகளிலிருந்து வத்திக்கானுக்கென கிரிக்கெட் குழு ஒன்றை உருவாக்கவும் ஏற்கனவே திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.