உலகில் மூன்று கோடிப் பேர் அடிமை வாழ்க்கை, புதிய அறிக்கை
அக்.18,2013. உலக அளவில், இன்றும், ஏறக்குறைய மூன்று கோடிப் பேர் அடிமை போன்ற நிலையில்
வாழ்ந்து கொண்டிருக்கின்றனர், இவர்களில் பெரும்பகுதியினர் ஆசியாவில் உள்ளனர் என்று, புதிய
அறிக்கை ஒன்று கூறுகிறது. ஆஸ்திரேலியாவை மையமாகக் கொண்ட Walk Free Foundation என்ற
அமைப்பு, நவீன அடிமைத்தனம் குறித்து 162 நாடுகளில் எடுத்த ஆய்வில், இந்தியாவில் மட்டும்
ஒரு கோடியே 40 இலட்சம் பேர் அடிமைநிலைகளிலும், கடனை அடைப்பதற்காகக் கொத்தடிமைகளாகவும்,
கட்டாயமாக வேலை செய்யும் நிலையில் சிக்குண்டும் இருக்கின்றனர் என்று கூறப்பட்டுள்ளது. ஆனால்
மௌரித்தானியாவில் மட்டும் இந்தப் பிரச்சனை மிகவும் கடுமையாக நிலவுவதாகக் கூறும் இந்த
அறிக்கை, அந்நாட்டின் மொத்த மக்கள் தொகையில் நான்கு விழுக்காட்டினர் அடிமைகளாகவே வாழ்கின்றனர்
என்று கூறுகிறது. மேலும், இலங்கையில் போர் முடிந்து 4 ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில்,
அந்நாட்டின் வடகிழக்கில் உள்ள தமிழ் மற்றும் முஸ்லிம் சிறுபான்மையினப் பெண்கள் கடுமையாக
விளிம்பு நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதுடன், மோசமான பாதுகாப்பின்மையையும் எதிர்கொள்கின்றனர்
என்று, மனித உரிமைகள் அமைப்பான Mgr International எனப்படும், சிறுபான்மையின உரிமைகளுக்கான
பன்னாட்டு அமைப்பு கூறியுள்ளது.