அக்.16,2013. புதிய வழிகளில் நற்செய்தியை எடுத்துரைத்தல், வாழ்வை ஆதரித்தல், குடும்பங்களைப்
பேணுதல் ஆகிய மூன்று அழைப்புக்களை அண்மையில் வியட்நாம் ஆயர்கள் மக்களுக்கு விடுத்துள்ளனர். வியட்நாமில்
உள்ள 26 மறைமாவட்டங்களின் ஆயர்கள் அண்மையில் Ho Chi Minh நகரில் மேற்கொண்ட ஆண்டு கூட்டத்தின்
இறுதியில் வெளியிட்ட ஒரு பொது மடலில் இம்மூன்று அழைப்புக்களையும் விடுத்துள்ளனர். திருமணம்,
வாழ்வைப் பேணும் கலாச்சாரம், குறிப்பாக, கருக்கலைத்தலுக்கு எதிரான ஒரு நிலைப்பாடு ஆகியவற்றை
கிறிஸ்தவர்கள் மேற்கொள்ளும்போது, அவை, குடும்ப வாழ்வை ஆழப்படுத்தும் முயற்சிகளாக மாறும்
என்று ஆயர்கள் கூறியுள்ளனர். அருள் பணியாளர்கள், இருபால் துறவியர் மற்றும் பொது நிலையினர்
ஆகியோரை தகுந்த வழிகளில் உருவாக்கும் திட்டங்கள் ஒவ்வொரு மறைமாவட்டத்திலும் தெளிவுபடுத்தப்பட
வேண்டும் என்றும் ஆயர்களின் பொது மடல் எடுத்துரைத்துள்ளது.