கர்தினால் பெர்த்தோனே அவர்களின் திருப்பீடச் செயலர் பணி நிறைவு
அக்.15,2013. இச்செவ்வாயன்று திருப்பீடச் செயலகப் பணியை நிறைவு செய்த கர்தினால் தர்ச்சீசியோ
பெர்த்தோனே அவர்கள், திருப்பீட நிர்வாகத்தில் ஆற்றிய பணிகளுக்கு நன்றி தெரிவித்தார் திருத்தந்தை
பிரான்சிஸ். வத்திக்கானிலுள்ள திருப்பீடச் செயலகத்தின் நூலகத்தில் நடைபெற்ற சிறிய
நிகழ்வில் பேசிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், புதிய திருப்பீடச் செயலர் பேராயர் பியத்ரோ
பரோலின் அவர்கள், அறுவைச் சிகிச்சையிலிருந்து குணமடைந்து வருவதால், இன்னும் சில வாரங்களில்
அவர் இந்தப் பணியைத் தொடங்குவார் என அறிவித்தார். தற்போது பேராயர் பரோலின் அவர்கள்
இந்நிகழ்வில் கலந்துகொள்ளவில்லையெனினும், அவர், திருப்பீடச் செயலகத்தில் மிகுந்த ஆற்றலுடனும்,
ஆர்வத்துடனும், மனித நேயம் கலந்த உரையாடல் திறமையுடனும் பல ஆண்டுகள் பணியாற்றியுள்ளார்
என்பதையும் குறிப்பிட்டார் திருத்தந்தை பிரான்சிஸ். கடந்த ஆகஸ்ட் 31ம் தேதி புதிய
திருப்பீடச் செயலராக, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களால் நியமனம் செய்யப்பட்ட பேராயர்
பியத்ரோ பரோலின் அவர்கள், தற்போது வெனெசுவேலா நாட்டுத் திருப்பீடத் தூதராக உள்ளார். பேராயர்
பரோலின், 2002ம் ஆண்டு முதல் 2009ம் ஆண்டுவரை திருப்பீடச் செயலகத்தில் பணியாற்றியுள்ளார்.