புதிய வழிகளில் நற்செய்தியை அறிவிக்கும் பணி திருப்பீட அவையின் உறுப்பினர்களுக்கு
திருத்தந்தையின் வாழ்த்து
அக்.14,2013. இந்த நம்பிக்கை ஆண்டில் சிறப்புறப் பணியாற்றிவரும் உங்கள் ஆர்வத்தை பாராட்டுகிறேன்
என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், புதிய வழிகளில் நற்செய்தியை அறிவிக்கும் பணி திருப்பீட
அவையின் உறுப்பினர்களை வாழ்த்தினார். முன்னாள் திருத்தந்தை பெனெடிக்ட் அவர்களால்,
2010ம் ஆண்டு நிறுவப்பட்ட இந்தப் புதியத் திருப்பீட அவையின் ஆண்டு நிறைவுக் கூட்டத்தில்
கலந்துகொண்ட உறுப்பினர்களை, இத்திங்கள் மதியம் திருப்பீடத்தில் சந்தித்தத் திருத்தந்தை
பிரான்சிஸ் அவர்கள் இவ்வாறு கூறினார். சான்று பகர்வதன் முக்கியத்துவம், சந்தித்து
உரையாடுவதன் அவசியம், அடிப்படைகளை மையப்படுத்தும் மேய்ப்புப்பணித் திட்டங்கள் என்ற மூன்று
கருத்துக்களை புதிய வழிகளில் நற்செய்தியை அறிவிக்கும் பணி திருப்பீட அவையின் உறுப்பினர்களிடம்
திருத்தந்தை பகிர்ந்துகொண்டார். உலகில் வாழும் அனைத்து உயிரினங்களுக்கும், குறிப்பாக,
மனிதர்கள் அனைவருக்கும் இறைவனின் கருணையை வெளிப்படுத்தும் சாட்சிகளாக வாழ்வது ஒவ்வொரு
கிறிஸ்தவருக்கும் அளிக்கப்பட்டுள்ள அழைப்பு என்று திருத்தந்தை எடுத்துரைத்தார். புதிய
வழிகளில் நற்செய்தியை அறிவிப்பதன் அடிப்படைத் தளமாக மனிதர்களைச் சந்திப்பது அமையவேண்டும்
என்றும், இந்த உரையாடல் முயற்சியில் யாரும் புறக்கணிக்கப்படக் கூடாது என்றும் திருத்தந்தை
வலியுறுத்திக் கூறினார். மனித வாழ்வுக்குத் தேவையான அடிப்படை உண்மைகளை எடுத்துரைக்க
தூய ஆவியாரின் படைப்பாற்றல் மிகுந்த அருளை, புதிய வழிகளில் நற்செய்தியை அறிவிக்கும் பணி
திருப்பீட அவையின் உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் பெறவேண்டும் என்ற ஆசீரோடு திருத்தந்தை
தன் உரையை நிறைவு செய்தார்.