லாம்பெதுசா தீவில் இறந்தவர்களை, டுவிட்டரில் நினைவுகூர்ந்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்
அக்.12,2013. “ஆண்டவரே, இரக்கமாயிரும்! நாங்கள் அடிக்கடி எங்களது வசதியான வாழ்வால் கண்களை
மூடிக்கொள்கின்றோம் மற்றும் எம் கதவுகளுக்கு அருகில் இறப்பவர்களைப் பார்ப்பதற்கு மறுக்கின்றோம்”
என்று இச்சனிக்கிழமையன்று தனது டுவிட்டர் பக்கத்தில் எழுதியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ். @Pontifex
என்ற தனது டுவிட்டர் பக்கத்தில் தினமும் ஒன்பது மொழிகளில் எழுதிவரும் திருத்தந்தை பிரான்சிஸ்,
தென் இத்தாலியின் லாம்பெதுசா தீவில் இவ்வெள்ளியன்று படகு கவிழ்ந்ததில் இறந்த குடியேற்றதாரரை
தனது டுவிட்டரில் நினைவுகூர்ந்துள்ளார். மேலும், 2014ம் ஆண்டு ஏப்ரல் 27ம் தேதி நடைபெறவுள்ள
முத்திப்பேறுபெற்ற திருத்தந்தையர்கள் 23ம் ஜான், 2ம் ஜான் பால் ஆகிய இருவரின் புனிதர்பட்ட
விழாத் திருப்பலிக்கு நுழைவுச் சீட்டு எதுவும் தேவையில்லையெனவும், வத்திக்கான் புனித
பேதுரு வளாகத்துக்கு முதலில் வருபவர்கள் முதல் இடங்களில் அமரலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.