அக்டோபர் 26, 27 ‘குடும்பங்களின் திருப்பயணத்தில்’ 1,50,000 பேர் பங்கேற்கவுள்ளனர்
அக்.12,2013. இம்மாதம் 26, 27 தேதிகளில் திருப்பீட குடும்ப அவை நடத்தவிருக்கும் ‘குடும்பங்களின்
திருப்பயணத்தில்’ 75க்கும் மேற்பட்ட நாடுகளிலிருந்து ஏறக்குறைய ஒரு இலட்சத்து 50 ஆயிரம்
பேர் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. நம்பிக்கை ஆண்டின் ஒரு பகுதியாக,
திருப்பீட குடும்ப அவை இம்மாதம் 26, 27 தேதிகளில் நடத்தவிருக்கும் 12வது ஆண்டுக் கூட்டம்
பற்றி நிருபர் கூட்டத்தில் விளக்கிய இத்திருப்பீட அவையின் தலைவர் பேராயர் Vincenzo Paglia
அவர்கள், நாம் அனைவரும் தேர்ந்தெடுக்க வேண்டிய பாதையை திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள்
சுட்டிக்காட்டி வருகிறார் என்று கூறினார். 26ம் தேதி சனிக்கிழமையன்று வத்திக்கான்
தூய பேதுரு வளாகத்தில் இடம்பெறும் விசுவாசத் திருப்பயணத்தின்போதும், 27ம் தேதி ஞாயிறு
திருப்பலியின்போதும் இப்பயணிகள் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களைச் சந்தித்து அவரின் அறிவுரைகளைக்
கேட்பதற்கு வாயப்புப் பெறுவார்கள் என்றும் பேராயர் Paglia கூறினார். 26ம் தேதி சனிக்கிழமை
நிகழ்வில் சிறார் மற்றும் முதியோரின் பங்கு பெரிய அளவில் இருக்கும் என்றும், இக்காலத்திய
நுகர்வுக் கலாச்சாரத்தில் இவர்களே பெரிதும் துன்புறுகின்றனர் என்றும் பேராயர் Paglia
கூறினார்.