திருத்தந்தையின் டுவிட்டர் செய்தி : எம் அன்னையாகிய மரியே, சிலுவையை ஏற்று வாழ எமக்கு
சக்தியைத் தாரும்
அக்.11,2013. நாம் சிலுவையைச் சந்திக்கும்போது, அன்னைமரி பக்கம் திரும்பி, எம் அன்னையாகிய
மரியே, சிலுவையை ஏற்று வாழ எமக்கு சக்தியைத் தாரும் எனக் கேட்போம் என்று, @Pontifex
என்ற தனது டுவிட்டர் பக்கத்தில் இவ்வெள்ளிக்கிழமையன்று எழுதியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ். மேலும்,
அக்டோபர் 13, வருகிற ஞாயிறன்று, பாத்திமா அன்னையின் திருவுருவத்துக்கு முன்பாக, இவ்வுலகை
மரியின் மாசற்ற திருஇதயத்துக்கு அர்ப்பணிக்கவுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ். கத்தோலிக்கத்
திருஅவையில் சிறப்பிக்கப்பட்டுவரும் நம்பிக்கை ஆண்டின் ஒரு நிகழ்வாக இச்சனிக்கிழமையும்,
ஞாயிற்றுக்கிழமையும் (அக்.12, 13) மரியின் நாள்களாகச் சிறப்பிக்கப்படுகின்றன. இந்த
வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வுகளுக்கென போர்த்துக்கல் நாட்டு பாத்திமாவிலிருந்து பாத்திமா
அன்னையின் திருவுருவம் வத்திக்கானுக்குக் கொண்டுவரப்பட்டு இவ்விரு நாள்களின் திருவழிபாடுகளின்போது
வத்திக்கான் புனித பேதுரு வளாகத்தில் வைக்கப்படும்.